இசுலாமியர்களை இழிவுபடுத்தும் ‘கேரளா ஸ்டோரி 2’... தடை செய்யுங்க, இல்லை... சீமான் விடுத்த எச்சரிக்கை!
NTK Seeman Condemn to DMK Govt MK Stalin kerala story 2
இசுலாமியர்களை இழிவுபடுத்தும் ‘கேரளா ஸ்டோரி 2’ திரைப்படத்தைத் தமிழ்நாடு அரசு தடை செய்யாவிட்டால் கடுமையான பின் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் அறிக்கையில், "இசுலாமிய மக்களை மிகக்கேவலமாக இழிவுப்படுத்திப் பயங்கரவாதிகளாகக் கொலைகாரர்களாகச் சித்தரிக்கும் ‘கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் நீட்சியாக கேரளா ஸ்டோரி-2 திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது. ‘கேரளா ஸ்டோரி-1’ திரைப்படத்தைத் தமிழ்நாட்டில் திரையிட அனுமதித்தபோதே, அதனைக் கடுமையாக எதிர்த்து நாம் தமிழர் கட்சி போராடிய நிலையில், தற்போது ‘கேரளா ஸ்டோரி-2 திரைப்படத்தையும் திமுக அரசு தமிழ்நாடு முழுதும் திரையிட அனுமதித்திருப்பது வெட்கக்கேடானது.
*உலகம் முழுவதும் அவரவருக்கென்று ஒரு மதக் கோட்பாடு இருக்கிறது. ஒரு நாட்டிற்குள்ளேயே பல வழிபாட்டு முறைகள் உள்ளன. அவை அனைத்தையும் நாம் ஏற்கின்றோம், மதிக்கின்றோம். மதம், வழிபாடு, உணவு, உடை போன்றவை ஒவ்வொரு தனிமனிதனின் அடிப்படை உரிமைகளாகும். அதில் தலையிடவோ, இழிவுப்படுத்தவோ அரசு உட்பட எவருக்கும் உரிமையில்லை. ‘உன் மதம் சிறந்தது வழிபடு; என் மதமும் சிறந்தது வழி விடு’ என்பது தான் நாம் ஏற்க வேண்டிய மாந்தநேய கோட்பாடு.* மாறாக இந்நாட்டில் சகோதரத்துவத்துடன் வாழும் இஸ்லாமியர்களை, கிறித்தவர்களை தவறாகக் காட்டி வெறுப்பு நஞ்சினை விதைப்பதென்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.
சாதியும், மதயும் எப்படி ஒரு நாட்டில் அரசியலாகும்?. பணத்தை முன்னிறுத்தி அரசியல் செய்தால், ஒழுக்கமும், பண்பாடும் இருக்காது. அதேபோன்று சாதி, மதத்தை முன்னிறுத்தி அரசியல் செய்தால் அந்த நாட்டில் மனிதம் என்பதே மரித்துபோய், மக்களுக்கானசேவை என்பதே இல்லாமல் போகும். நாட்டின் குடிகளுக்குள் பகை ஏற்பட்டால் தீர்த்து வைத்து, சமாதானம் ஏற்படுத்த வேண்டிய ஆட்சியாளர்களே, சாதி, மதத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தால் அவர்கள் எதைச் சாதிப்பார்கள்? மதத்தைப் பார்ப்பவர்கள் மனிதத்தை எப்படிப் பார்ப்பார்கள்? படிக்கத் தரமான கல்வி இல்லை, குடிக்கத் தூய குடிநீர் இல்லை, தலைநகரிலேயே தூய காற்று இல்லை. அனைத்து இயற்கை வளங்களையும் சுரண்டி தின்றுவிட்டு அதுபற்றியெல்லாம் எந்தக் கேள்வியும் எழுந்துவிடாது, மக்களின் கண்ணை மறைப்பதற்காகவே, தொடர்ச்சியாகச் சாதிப்போதை, மதப்போதை, சாராயப்போதை, இதைப்போன்று திரைபோதையும் பின்புலத்திலிருந்து ஆட்சியாளர்களால் மக்களுக்குள் ஏற்றப்படுகிறது. மதப்பிரிவினையை ஏற்படுத்தும் திரைப்படங்களைப் பாஜக ஆளும் மாநில அரசுகள் வரி தள்ளுபடி செய்து ஊக்கப்படுத்துவதும், பிரதமர் உள்ளிட்ட நாட்டின் அதியுயர் அமைச்சர்களே ஆதரித்து விளம்பரம் செய்வதும், விருது கொடுப்பதும் நாட்டின் பன்முகத்தன்மையையும், ஒற்றுமையையும் சிதைக்கவே வழிவகுக்கும்.
இசுலாமிய பெருமக்களை இழிவுப்படுத்தும் வழக்கமான குற்றக்காட்சிகளையும் தாண்டி, ‘கேரளா ஸ்டோரி2’ திரைப்படம் கட்டாய மதமாற்றம், லவ்ஜிகாத், கூட்டுப்பாலியல், மாட்டுக்கறி திணிப்பு போன்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் இசுலாமிய மத அடையாளங்களை இணைத்து திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் எந்த இடத்திலும் நடக்காதவற்றைக் குரூர கற்பனையில் திரைப்படமாக எடுப்பவர்களின் நோக்கம்தான் என்ன? அதே போன்று நிகழ்வுகள் நடந்து நாட்டில் மதக்கலவரம் ஏற்பட வேண்டும் என்பதா? நடக்காதவற்றைத் திரைப்படமாக எடுப்பவர்களுக்கு, நம் கண்முன்னே நடைபெற்ற மணிப்பூர் கலவரத்தையும், குஜராத் கலவரத்தையும் திரைப்படமாக எடுக்கும் துணிச்சல் உண்டா? குஜராத் கலவரம் குறித்த ஆவணப்படத்தைப் பிபிசி நிறுவனம் எடுத்தபோது அதைத் திரையிட பாஜக அரசு இந்தியா முழுக்கத் தடை செய்தது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
NTK Seeman Condemn to DMK Govt MK Stalin kerala story 2