'குற்றங்கள் மற்றும் ஊழல் ஆகியன திரிணாமுல் காங்கிரசின் அடையாளமாக மாறியுள்ளது': பிரதமர் மோடி விமர்சனம்..!
Crime and corruption have become the hallmark of Trinamool Congress says PM Modi
மேற்கு வங்க மாநிலத்திற்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி,மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைத்ததுடன், வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பல்வேறு ரயில் திட்டப்பணிகளையும் தொடங்கி வைத்துள்ளார். அதன் பின்னர் கோல்கட்டாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
மேற்கு வங்கம் வளர்ச்சி பெறும் வரை, வளர்ச்சியடைந்த பாரதம் என்ற யாத்திரை வெற்ற பெறாது என பாஜ நம்புகிறது என்றும், கடந்த 11 ஆண்டுகளில் இந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்தையும் மத்திய அரசு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன், மேற்கு வங்க மாநிலத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு கொடுத்த பணம் கொள்ளையடிக்கப்பட்டு திரிணமுல் குண்டர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும், துர்கா பூஜை நடைபெற உள்ள நிலையில் இங்கு வந்துள்ளேன். இந்த பூஜைக்காக, கோல்கட்டா விழாக்கோலம் பூண்டு தயாராகி வருகிறது. மகிழச்சிக்கான பண்டிகையுடன் வளர்ச்சிக்கான பண்டிகையை சேர்க்கும் போது மகிழ்ச்சி இரு மடங்கு ஆகும் என்று பேசியுள்ளார்.
அத்துடன், மத்திய அரசின் திட்டங்களின் பலன்கள், மக்களுக்கு சென்றடைய மேற்கு வங்கத்தில் பாஜ அரசை தேர்வு செய்ய வேண்டியது முக்கியம் என்றும், திரிணமுல் காங்கிரஸ் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு, பாஜ நிச்சயம் தேர்வு செய்யப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், மேற்கு வங்க மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும், குற்றங்கள் மற்றும் ஊழல் ஆகியன திரிணமுல் காங்கிரசின் அடையாளமாக மாறியுள்ளது என்றும் விமர்சித்துள்ளார். திரிணமுல் ஆட்சியில் இருக்கும் வரை மாநிலம் வளர்ச்சி அடையாது என்றும், ஆட்சியில் இருந்து திரிணமுல் காங்கிரஸ் அகற்றப்படும் போது தான் உண்மையான மாற்றம் ஏற்படும் என்றும் அறிவித்துள்ளார். அத்துடன், கிரிமினல்களும் ஊழல்வாதிகளும் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்றும், அவர்களை அதிகாரத்தில் அமர வைக்கக்கூடாது என்று மோடி மேலும் பேசியுள்ளார்.
English Summary
Crime and corruption have become the hallmark of Trinamool Congress says PM Modi