அமைதி திரும்பாத மணிப்பூரில் வன்முறைகளை கட்டுப்படுத்த கோப்ரா படையை களமிறக்கும் மத்திய அரசு..!
Central Government Deploys COBRA Force to Contain Violence in Manipur
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் வன்முறை ஏற்பட்டு மூன்று ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும், புதிய அரசு பதவியற்றுள்ள நிலையிலும் இன்னும் அம்மாநிலத்தில் அமைதி திரும்பாமல் உள்ளது. இந்நிலையில் மத்திய உள்துறையின் சிறப்பு கமாண்டோ படையான கோப்ரா படைப்பிரிவு மணிப்பூரில் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக இருக்கும் மெய்தி இன மக்கள், கடந்த 2023-ஆம் ஆண்டு தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி, போராட்டங்களில் குதித்தனர். இதை எதிர்த்து குக்கி பழங்குடியினர் பேரணி நடத்தினர். ஆனால், அந்த அமைதிப் பேரணியில் கலவரமாக வெடித்ததில் மணிப்பூர் வன்முறை நிலமானது.

இங்கு அரங்கேறிய வன்முறையில் கலவரங்களும் தீவைப்புச் சம்பவங்களும் நடந்தன. இதனால் சில நாட்கள் மணிப்பூர் முழுவதும் பற்றி எரிந்ததில், 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். பலர் அண்டைய மாநிலங்களுக்கு குடி பெயர்ந்துள்ளனர்.
இந்த வன்முறை ஏற்பட்டு மூன்று ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும் இன்னும் அம்மாநிலத்தில் அமைதி ஏற்படவில்லை. இந்நிலையில் மத்திய உள்துறையின் சிறப்பு கமாண்டோ படையான கோப்ரா படைப்பிரிவு மணிப்பூரில் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது.
அதாவது வன்முறையில் ஈடுபடுபவர்களை ஒடுக்க கோப்ரா படையின் இரு குழுக்களை மத்திய உள்துறை அமைச்சகம் மணிப்பூருக்கு அனுப்பவுள்ளது. சிஆர்பிஎஃப் படையின் ஒரு பிரிவான கோப்ரா படை பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கென்றே ஏற்படுத்தப்பட்ட சிறப்பு குழுவாகும். இக்குழு நக்ஸல் ஒழிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது மணிப்பூருக்கும் அனுப்பப்படவுள்ளது.
English Summary
Central Government Deploys COBRA Force to Contain Violence in Manipur