'40 ஆண்டுகளான இடதுசாரிகளின் கோட்டையை தகர்த்த பாஜக'; திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக விவி ராஜேஷ் பதவியேற்பு.!
BJPs VV Rajesh takes oath as the Mayor of Thiruvananthapuram Municipal Corporation
நாற்பது ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்திய இடதுசாரிகளை கோட்டையான திருவனந்தபுரம் மாநகராட்சி பாஜக தகர்த்துள்ளது. அதன்படி, திருவனந்தபுரம் மாநகராட்சியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், பாஜகவின் மாநில செயலாளரான விவி ராஜேஷ் மேயராகத் தேர்வாகியுள்ளார்.
திருவனந்தபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மேயர் தேர்தலில், பாஜகவைச் சேர்ந்த ராஜேஷ் 51 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மேயராகத் தேர்வானப் பின் பேசிய அவர், ''நாங்கள் இன்னும் முன்னோக்கிச் செல்வோம்'' எனத் தெரிவித்துள்ளார்.அத்துடன், மாநகராட்சியின் 101 வார்டுகளிலும் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும், திருவனந்தபுரத்தை வளர்ந்த நகரமாக மாற்றுவோம் என்றும் நம்பிக்கை கொடுத்துள்ளார்.

திருவனந்தபுரம் மாநகராட்சி மொத்தம் 101 உறுப்பினர்களைக் கொண்ட நிலையில் சுயேட்சை கவுன்சிலர் ஒருவரின் ஆதரவுடன் பாதிக்கும் மேற்பட்ட வாக்குகளை ராஜேஷ் பெற்றதாக கூறப்படுகிறது. மேலேயும், திருவனந்தபுரம் மாநகராட்சியில் தனிப்பெரும் கட்சியாகவும் பாஜக உருவெடுத்த்துள்ளது.
இந்த உள்ளாட்சி தேர்தலில் தோல்வி இடது ஜனநாயக முன்னணிக்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. ஆனாலும், கோழிக்கோடு மாநகராட்சியில் பெரும்பாலான வார்டுகளில் இடதுசாரிகள் வெற்றிப் பெற்றுள்ளது.

இந்த மேயர் தேர்தலின் போது, பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர், முன்னாள் மத்திய அமைச்சர் வி. முரளிதரன் மற்றும் முன்னாள் மாநில தலைவர் கே. சுரேந்திரன் போன்ற தலைவர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்தனர். கேரளாவில் மொத்தம் 06 மாநகராட்சிகள் இருக்கும் நிலையில், 04-இல் வெற்றி பெற்று ஐக்கிய ஜனநாயக முன்னணி முன்னிலையில் இருக்கிறது.
பாஜகவும் இடதுசாரி ஜனநாயக முன்னணியும் தலா ஒரு மாநகராட்சியில் வெற்றி பெற்றுள்ளது. ராஜேஷ் மேயராகத் தேர்வானது, கேரளாவின் நகர்ப்புற அரசியலில் பாஜகவுக்கான புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆறுமாதங்களுக்கு முன்பாகவே ராஜேஷ் தான் மேயர் வேட்பாளர் என்று பாஜக அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
English Summary
BJPs VV Rajesh takes oath as the Mayor of Thiruvananthapuram Municipal Corporation