ஜனாதிபதி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி; மணிப்பூரில் மீண்டும் பாஜக ஆட்சி..? முதல்வரை தேர்வு செய்யும் கட்சியின் எம்எல்ஏக்கள்..!
BJP MLAs have gathered in Manipur to decide on the chief minister for the new government
மணிப்பூரில் மீண்டும் மக்களாட்சியை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பாஜக தொடங்கியுள்ளது. இதற்காக மணிப்பூர் சட்டமன்றத்தில் பெரும்பான்மை பலம்பெற்றுள்ள பாஜக எம்எல்ஏக்கள் கூடி புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கவுள்ளனர்.
கடந்த 2023-ஆம் ஆண்டு, நாட்டின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையாக இருக்கும் மெய்தி இன மக்கள், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி, போராட்டங்களில் குதித்தனர். இதை எதிர்த்து குக்கி பழங்குடியினர் பேரணி நடத்தினர்.
இந்த பேரணி நாளடைவில் கலவரமாக வெடித்ததால் மணிப்பூர் வன்முறை மாநிலமாக மாறியது. இந்த வன்முறை சம்பவங்களில் தீவைப்புச் அரங்கேறியாதால் மணிப்பூர் முழுவதும் பற்றி எரிந்தது. இதன்காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்தனர். மணிப்பூர் முழுவதும் 351 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, 58,000 க்கும் மேற்பட்ட மக்கள் இன்னும் வசித்து வருகின்றனர்.

அத்துடன், அண்டை மாநிலங்களில் 60,000க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். மிக கொடூரமாக பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு வீதிகளில் அழைத்துச் செல்லப்பட்ட வீடியோக்கள், பாலியல் குற்றச்சாட்டுக்கள் குறித்த செய்தி வெளியாகி நாட்டை உலுக்கியது.
இந்த மணிப்பூர் வன்முறையில் 250க்கும் அதிகமானோர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். வன்முறை ஏற்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும் அம்மாநிலத்தில் இன்னும் அமைதி திரும்பவில்லை.
இதற்கிடையே, மெய்தி மற்றும் குக்கி இன மக்களிடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக மணிப்பூர் மாநில முதல்வராக இருந்து பைரன் சிங் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து பைரன் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பைரன் சிங் பதவி விலகியதைத் தொடர்ந்து மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. பிப்ரவரி 12-ஆம் தேதியுடன் மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி ஓராண்டை நிறைவு செய்துள்ளது.
இதையடுத்து, அங்கு மீண்டும் மக்களாட்சியை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பாஜக தொடங்கியுள்ளது. இதற்காக மணிப்பூர் சட்டமன்றத்தில் பெரும்பான்மை பலம்பெற்றுள்ள பாஜக எம்எல்ஏக்கள் கூடி புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கவுள்ளனர். இதற்காக தருண் சுக் என்பவரை மத்திய பார்வையாளராக பாஜக தலைமை நியமித்துள்ளது. பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸைச் சேர்ந்த இவர், இதற்கு முன், தெலங்கானா, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கிற்கான கட்சியின் பொறுப்பாளராக பணியாற்றியுள்ளார்.
English Summary
BJP MLAs have gathered in Manipur to decide on the chief minister for the new government