'இந்தியாவின் ஜனநாயக பயணத்தில் அரிய சாதனை'; உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ள பீஹார் முதல்வர் நிதிஷ்குமார்..!
Bihar Chief Minister Nitish Kumar is in the World Record Book
அண்மையில் நடந்து முடிந்த பீஹார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. இதனால், ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார் மீண்டும் அம்மாநில முதல்வராக பதவியேற்றார்.
சுதந்திர இந்தியாவின் ஒரு மாநில முதல்வராக 10-வது முறையாக பதவியேற்ற ஒரே நபர் என்ற பெருமையை நிதிஷ்குமார் பெற்றார். அதன்படி, ஒருவரின் அரசியல் வரலாற்றில் ஈடு இணையற்ற பங்களிப்பை அளித்ததற்காக உலக சாதனை புத்தகத்தால் நிதிஷ் குமார் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
அதிக நாட்கள் முதல்வராக பதவி வகித்தவர்கள் பட்டியலில், நிதிஷ் குமார் 08-வது இடத்தில் உள்ளார். 19 ஆண்டுகளை கடந்து முதல்வராக நிதிஷ் பதவி வகித்து வருகின்றார். ஐக்கிய ஜனதா தளம் தேசிய செயல் தலைவர் சஞ்சய்குமார் ஜா நிதிஷ்குமாரின் உலக சாதனை குறித்து, தமது எக்ஸ் வலைதள பதிவில் கூறியுள்ளதாவது;
10-வது முறையாக முதல்வராக பதவியேற்றுள்ள நிதிஷ்குமார் அடைந்த அசாதாரண மைல் கல்லை லண்டனில் உள்ள உலக சாதனை புத்தகம் (World book of Records) அங்கீகரித்துள்ளது என்பது மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது. இது இந்தியாவின் ஜனநாயக பயணத்தில் உண்மையிலேயே அரிய சாதனை.
இந்த குறிப்பிடத்தக்க சாதனை அவரது அசைக்க முடியாத பொது சேவை, நிலையான நிர்வாகம் மற்றும் பீஹார் மக்கள் அவர் மீது வைத்த நம்பிக்கையின் பிரதிபலிப்பாகும். பத்து முறை ஒரு மாநிலத்தை வழிநடத்துவது என்பது வெறும் தனிப்பட்ட சாதனை மட்டுமல்ல; இது பீஹாருக்கு ஒரு வரலாற்று தருணமாகவும் அதன் ஜனநாயக வலிமைக்கு ஒரு சான்றாகவும் நிற்கிறது.
பீஹாருக்கு ஒரு பெருமையான தருணம். மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து வழிகாட்டும் நிலையான அர்ப்பணிப்புள்ள தலைவரை போற்றுவோம்.'' என்று சஞ்சய் குமார் ஜா கூறியுள்ளார்.
English Summary
Bihar Chief Minister Nitish Kumar is in the World Record Book