முற்றிய பப்ஜி வெறி..தாய், 3 சகோதரகளை கொன்ற சிறுவனுக்கு 100 ஆண்டுகள் சிறை!
A boy who killed his mother and 3 brothers because of his extreme PUBG obsession gets 100 years in prison
பாகிஸ்தானில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று தற்போது சர்வதேச அளவிலும் பேசப்படுகிறது. ஆன்லைன் PUBG விளையாட்டின் வெறியில் 17 வயது சிறுவன் தனது தாயாரையும், மூன்று சகோதரர்களையும் சுட்டுக் கொன்ற வழக்கில், லாகூர் நீதிமன்றம் கடுமையான தண்டனையை வழங்கியுள்ளது.
லாகூரின் கனா பகுதியில் வசிக்கும் ஜைன் அலி, 2022 ஆம் ஆண்டு இந்த கொடூரச் சம்பவத்தை நடத்தியிருந்தான். அப்போது அவனுக்கு வயது 14 தான். PUBG விளையாட்டில் அடிமையாகி, டார்கெட்களை அடைய முடியாதபோது ஆத்திரமடைவது வழக்கமாக இருந்தது.
அதே நேரத்தில், விளையாட்டில் அதிக நேரம் செலவழிக்கிறாய் என்று தாயார் நாகித் முபாரக் (45) கண்டித்தது, சிறுவனுக்கு மேலும் எரிச்சலை ஏற்படுத்தியது. ஆத்திரத்தில், வீட்டு கைத்துப்பாக்கியை எடுத்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்த தாயாரையும், அண்ணன் தைமூர் (20), சகோதரிகள் மனூர் (15), ஜன்னத் (10) ஆகியோரை சுட்டுக் கொன்றான்.
விசாரணையின் போது, விளையாட்டு அடிமைத்தனமே இந்தக் கொலையின் அடிப்படை காரணம் என்று காவல்துறை நீதிமன்றத்தில் வலியுறுத்தியது.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், குற்றவாளி ஜைன் அலிக்கு, அவரது வயதைக் கருத்தில் கொண்டு மரண தண்டனைக்கு பதிலாக நான்கு ஆயுள் தண்டனைகள் – ஒவ்வொரு கொலைக்கும் 25 ஆண்டுகள் என மொத்தம் 100 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கியது. மேலும், 4 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம், ஆன்லைன் விளையாட்டு அடிமைத்தனத்தின் ஆபத்தையும், அது எவ்வளவு தீவிரமான விளைவுகளை உண்டாக்கக்கூடும் என்பதையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
English Summary
A boy who killed his mother and 3 brothers because of his extreme PUBG obsession gets 100 years in prison