ஆந்திர பிரதேசம் || வயலில் அறுந்து கிடந்த மின்கம்பி.. மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்த சோகம்.!
3 died in electrocution in andhrapradesh
ஆந்திர மாநிலத்தில் வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் ராப்பாடு மண்டலம் சீயப்பாடு பகுதியை சேர்ந்தவர் பெத்த ஓபுல ரெட்டி (50). இவரது சகோதரர் பால ஓபுல ரெட்டி (48). இவர்கள் இருவரும் விவசாயம் செய்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று விவசாய பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து ஆடிப்பதற்காக அதே பகுதியை சேர்ந்த மல்லிகாஜுன் ரெட்டி (20) என்பவரை அழைத்து வந்துள்ளனர்.
இதையடுத்து மல்லிகார்ஜுன் ரெட்டி விவசாய நிலத்தில் இறங்கி பயிர்களுக்கு மருந்து அடித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது விவசாய நிலத்தின் வழியாக சென்ற மின் வயர் ஒன்று வயலில் அறுந்து விழுந்துள்ளது.
இதனை கவனிக்காத மல்லிகார்ஜுன் ரெட்டி மின் வயரை மிதித்ததால் மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடியுள்ளார். இதை பார்த்த சகோதரர்கள் இருவரும், மல்லிகார்ஜுன் ரெட்டியை காப்பாற்ற முயன்றனர். அப்போது அவர்கள் இருவர் மீதும் மின்சாரம் தாக்கி, 3 பேரும் உடல் கருகி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்நிலையில் பெத்த ஓபுல ரெட்டியின் மனைவி சாவித்திரியம்மா விவசாய நிலத்தில் உள்ளவர்களுக்கு மதியம் சாப்பாடு கொண்டு சென்றபோது 3 பேரும் மின்சாரம் தாக்கி இறந்தது கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த மூன்று பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
3 died in electrocution in andhrapradesh