டெங்கு பாதிப்பு ஒரு பக்கம்...கட்டணக் கொள்ளை மறுபக்கம்...! - தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை...!
Dengue outbreak on one side fee theft other Tamil Nadu Health Department issues strict warning private hospitals
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகளிடம் சிகிச்சைக்காக கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, விதிமுறைகளை மீறி அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதுவரை டெங்கு பாதிப்பால் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுமார் 16 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தினந்தோறும் புதிதாக நூற்றுக்கணக்கானோருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு வருவதால், டெங்கு தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளில் சுகாதாரத்துறை தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

இந்த சூழலில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மருத்துவமனைகளை நாடும்போது, வழக்கமான கட்டணத்தைவிட அதிக தொகை வசூலிக்கப்படுவதாக தமிழக சுகாதாரத்துறைக்கு புகார்கள் வந்துள்ளன.சில தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கான சாதாரண சிகிச்சைக்கு ரூ.22 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்படும் நிலையில் ரூ.75 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை வசூலிக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
நோயின் பாதிப்பால் ஏற்கனவே கவலையில் இருக்கும் நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு, சிகிச்சைக் கட்டணமும் கூடுதல் சுமையாக மாறுவதாக கூறப்படும் நிலையில், இந்த விவகாரம் சுகாதாரத்துறையின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையடுத்து, டெங்கு நோயாளிகளிடம் விதிமுறைகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
மேலும், டெங்கு சிகிச்சைக்காக நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட அதிகமாக வசூலிப்பது உள்ளிட்ட புகார்கள் தொடர்பாக பொதுமக்கள் உடனடியாக 104 என்ற சுகாதார உதவி எண்ணை தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நோயாளிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு, தனியார் மருத்துவமனைகள் விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Dengue outbreak on one side fee theft other Tamil Nadu Health Department issues strict warning private hospitals