இன்று 2021ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம்.. வானில் தோன்றும் ரத்த நிலவு.! எங்கு தெரியும்.?
blood moon
ஒரு ஆண்டில் இரண்டு அல்லது மூன்று முறை சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம் ஏற்படக்கூடும். இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் வரும் இன்று (புதன்கிழமை) பௌர்ணமி நாளன்று நிகழவுள்ளது. சந்திர கிரகணம் என்பது சூரியன், பூமி, நிலா ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும். அப்போது பூமியின் நிழல் சந்திரனின் மீது விழும் நிகழ்வு ஆகும்.
பொதுவாக சந்திர கிரகணம் பௌர்ணமி நாளில் நிகழ்கிறது. அதே நேரத்தில் எல்லா பௌர்ணமி நாளிலும் கிரகணங்கள் ஏற்படுவதில்லை. இன்று மதியம் 2.17 மணி முதல் இரவு 7.19 மணி வரை மிக நீண்ட சந்திரகிரகணம் நிகழப்போகிறது.
சந்திர கிரகணத்திற்கு பின்னர் நிலவு ரத்த சிவப்பு நிறத்தில் இருக்கும். பூமிக்கு மிக அருகில் நிலவு வரும்போது வளிமண்டல ஒளிச்சிதறல் ஏற்படும். இதன் காரணமாகவே ரத்த சிவப்பாக மாறுகிறது. ரத்த சிவப்பு நிறத்தில் வழக்கத்தை விட பிரகாசமாக காட்சி அளிக்கும் இதனை வெறும் கண்களால் பார்க்க முடியும் என்றாலும், தமிழகத்தில் முழு சந்திர கிரகணத்தை பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திர கிரணத்தை எங்கெல்லாம் பார்க்கலாம்?
இந்த முழு சந்திர கிரணத்தை கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பார்க்க முடியும். இந்தியாவில் கொல்கத்தாவில் மாலை 6.15 முதல் 6.22 வரை மட்டுமே இந்த சந்திர கிரகணத்தை காணலாம்.
அடிவானத்தின் கீழ் நிலவு இருக்கும் என்பதால் சென்னை, மும்பை, டெல்லி நகரங்களில் முழு கிரகணம் தெரியாது. பூமியின் நிழலில் ஒரு சிறு பகுதியை நிலவு கடக்கும்போது மட்டும் பகுதி கிரகணத்தை காணலாம்.