புதிய கல்வி திருப்பம்! 6ம் வகுப்பு முதல் 3 மொழி கட்டாயம்...9ம் வகுப்பில் இருநிலை தேர்வு முறை...! - சிபிஎஸ்இ அதிரடி அறிவிப்பு
New educational twist 3 languages compulsory from 6th standard Two stage examination system 9th standard CBSE action announcement
சி.பி.எஸ்.இ. கல்வி வாரியம், கல்வித் துறையில் புதுமையான மாற்றங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2026-27ஆம் கல்வியாண்டு முதல் புதிய தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படவுள்ளதாகவும், 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் இருநிலை (ஸ்டேன்டர்டு & மேம்பட்ட) கற்றல் முறைகள் அறிமுகமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த புதிய மும்மொழிக் கொள்கையின் கீழ், மாணவர்கள் கற்கும் மூன்று மொழிகளில் குறைந்தது இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்பது கட்டாய நிபந்தனையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பல்மொழிக் கற்றலை ஊக்குவிக்கும் நோக்கில், 6ஆம் வகுப்பு முதல் மூன்றாவது மொழி கட்டாயமாக்கப்படவுள்ளதாகவும், இதன் மூலம் மாணவர்கள் குறைந்தது இரண்டு இந்திய மொழிகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பு பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் கல்வி கற்றுவிட்டு இந்தியாவிற்கு திரும்பும் மாணவர்களுக்கு, அவர்கள் முன்பு கற்ற மூன்றாவது மொழி இங்கு கிடைக்காத சூழலில், 8 அல்லது 9ஆம் வகுப்பு வரை சில தளர்வுகள் வழங்கப்படலாம். ஆனால், பாடத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மொத்த பாடங்களையும் முழுமையாகக் கற்பது அவசியம் என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் இருநிலைத் தேர்வு முறை அறிமுகமாகிறது. அடிப்படை தரநிலைக்கான 80 மதிப்பெண் பொதுத் தேர்வை அனைத்து மாணவர்களும் கட்டாயம் எழுத வேண்டும். அதேசமயம், அதிக திறனை வெளிப்படுத்த விரும்பும் மாணவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் மேம்பட்ட நிலைத் தேர்வை எழுதலாம். இது 25 மதிப்பெண்களுக்கான கூடுதல் தேர்வாக இருக்கும்.இந்த மேம்பட்ட நிலைத் தேர்வில் 50% அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெறும் மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழில் ‘மேம்பட்ட தகுதி’ என குறிப்பிடப்படும்.
இந்த மதிப்பெண்கள் மொத்த மதிப்பெண்ணில் சேர்க்கப்படாது என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்த புதிய கல்வி அமைப்பின் தொடர்ச்சியாக, 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 2028ஆம் கல்வியாண்டு முதல் புதிய வடிவத்தில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், மும்மொழிக் கொள்கையை உடனடியாக அமல்படுத்தும் வகையில், பள்ளிகள் ஒரு வாரத்திற்குள் தயாராகுமாறு சி.பி.எஸ்.இ. அறிவுறுத்தியுள்ளது.
பாடப்புத்தகங்கள் வருவதற்காக காத்திருக்காமல், 6ஆம் வகுப்பில் மூன்றாவது மொழிக் கற்றலை உடனடியாக தொடங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.2030-31ஆம் கல்வியாண்டுக்குள், இந்த மும்மொழிக் கொள்கையை 10ஆம் வகுப்பு வரை முழுமையாக கட்டாயமாக்கும் நோக்கில் சி.பி.எஸ்.இ. திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது என தெரிவிக்கப்படுகின்றது.
English Summary
New educational twist 3 languages compulsory from 6th standard Two stage examination system 9th standard CBSE action announcement