ஊர் திருவிழா.. மிஸ் பண்றீங்களா? உங்கள் ஊர் திருவிழாவை ஞாபகப்படுத்தும் பகுதி இது..! - Seithipunal
Seithipunal


நம்ம ஊர் திருவிழா:

திருவிழா என்பது ஆண்டுக்கு ஒருமுறை மக்கள் அனைவரும் ஒன்றுகூடி கொண்டாடவும், தங்களின் இறைபக்தியையும், ஊரின் சிறப்பையும் பேணிக் காத்திடவும் உருவாக்கப்பட்டதாகும். இப்படிப்பட்ட நம்ம ஊர் திருவிழா பற்றிய பதிவை இங்கே காண்போம்.

பொதுவாக திருவிழாக்கள் 9, 11 அல்லது 13 நாட்கள் என ஒற்றைப்படை எண் கொண்ட நாட்களாக நடைபெறும். அவ்வாறு ஊரின் தலைமை பொறுப்பாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி திருவிழா நடைபெறும் தேதிகளை முடிவு செய்வர். ஊரிலுள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்ணயித்து அதனை தலைகட்டு வரி என திருவிழாவிற்கு தேவையான பணத்தினை திரட்டுவர். பிறகு அந்நாளின் முந்தைய வாரங்களிலிருந்தே திருவிழாவிற்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்குவார்கள். ஊர் பொதுமக்களும் தத்தம் வீடுகளை சுத்தம் செய்து, வெள்ளையடித்து, சாணமிட்டு மொழுகி, அழகழகான கோலங்களை போட்டு அழகுப்படுத்துவார்கள்.

காப்புக்கட்டுதல் :

திருவிழாவின் முதல்நாளன்று காப்புக்கட்டுதல் நடைபெறும். அன்று முதல் வீட்டில் உள்ள அனைவரும் சுத்தபத்தமாக இருப்பர். நேர்த்திக்கடன் செலுத்த வேண்டியவர்கள் ஒரு மஞ்சள் துண்டை ஒரு துணியால் கட்டி அதனை கைகளில் கட்டிக் கொள்வர். இதனை காப்புக்கட்டு எனக் கூறுவர். அனைத்து வீடுகளிலும் மாவிலைகள், வேப்பிலைகள் ஆகியவற்றால் தோரணங்கள் கட்டுவார்கள். திருவிழா நடைபெறும் கோவில்களிலும், தெருக்களிலும் விதவிதமான தோரணங்கள், மின்சார லைட்டுகளை கட்டுவார்கள். காப்புக்கட்டுதல் முடிந்த ஊரிலிருந்து யாரும் வெளியூர் செல்ல மாட்டார்கள். இந்நாளில் தான் முளைப்பாரி போடுவார்கள்.

காப்புக்கட்டுதல் முடிந்த அடுத்த நாளில் இருந்து திருவிழா நடக்கும் அம்மன் கோவில்களில் அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். பூச்சொரிதல், விளக்கு பூஜை மற்றும் சங்கு பூஜை ஆகியவையும் நடைபெறும். சில ஊர்களில் அம்மனுக்கு முன் கம்பம் எனப்படும் புதிய மரக்கிளையில் மஞ்சள் தேய்த்து நட்டு வைத்து இருப்பார்கள். ஊர் பொதுமக்கள் அனைவரும் அவற்றிற்கு தண்ணீர் ஊற்றுவார்கள். சில ஊர்களில் கும்பம் எனப்படும்; வேப்பிலை மற்றும் பூக்களால் அலங்கரித்த பானையை வழிபடுவார்கள். ஊரார் அனைவரும் அவரவர் உறவினர்களை திருவிழாவிற்கு தங்கள் ஊருக்கு வருமாறு அழைப்பு விடுப்பார்கள்.

தீர்த்தக்குடம் எடுத்தல் :

திருவிழாவின் கடைசி ஐந்து நாட்களுக்கு முன்னர் ஊர் பொதுமக்கள் தீர்த்தக்குடம் எடுப்பர். அவரவர் விருப்பத்திற்கேற்ப தண்ணீர், பால், இளநீர், பன்னீர், தேன் ஆகியவற்றை தீர்த்தமாக எடுப்பார்கள். ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து ஊரை சுற்றி அனைத்து தெருக்களிலும், வீதிகளிலும் சுற்றி கோலாகலமாக பம்பை, டிரம்ஸ் ஆகிய வாத்தியங்கள் முழங்க தீர்;த்தக்குடங்களை கோவிலுக்கு எடுத்து வருவார்கள். அவ்வாறு கொண்டு வரும் தீர்த்தங்களை அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thiruvila in before lockdown


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->