மாணவியின் ஒரு வார்த்தையால் வெளிச்சத்துக்கு வந்த கொடுமை... பாலியல் தொல்லை புகாரில் தொழிலாளி கைது...!
cruelty that came light single word from student Worker arrested harassment complaint
குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகத் தெரிவிக்கப்படும் தொழிலாளியை காவலர்கள் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையை துணிச்சலுடன் வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

களியக்காவிளை பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். தாயை இழந்த அந்த மாணவி, தந்தையின் கவனிப்பின்றி பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், பாட்டியின் வீட்டுக்கு மரவேலை செய்ய வரும் படந்தாலுமூடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (50) என்பவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது வீட்டில் மாணவி தனியாக இருந்த நேரத்தைப் பயன்படுத்தி, அவரை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து யாரிடமும் கூறக்கூடாது என்றும் மாணவியை அவர் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.இதற்கிடையே, மாணவி படிக்கும் பள்ளியில் பாலியல் அத்துமீறல்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவியும் பங்கேற்றுள்ளார்.
நிகழ்ச்சியில் அதிகாரிகள் மாணவர்களிடம் நம்பிக்கையுடன் பேசினர். இதனால் தைரியம் பெற்ற மாணவி, தனக்கு நேர்ந்த கொடுமையை அங்கு வெளிப்படையாக தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. தொழிலாளியின் செயலால் தான் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறி மாணவி கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
மாணவியின் தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி அதிகாரிகள் உடனடியாக காவலர்களிடம் புகார் அளித்தனர்.அதன் அடிப்படையில் மார்த்தாண்டம் மகளிர் காவலர்கள் விசாரணை நடத்தி, மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையை துணிச்சலுடன் வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
cruelty that came light single word from student Worker arrested harassment complaint