“காங்கிரஸ் ஆதரவு கடிதம் கொடுக்கவில்லை என்றால் அமித்ஷா கதையை முடித்திருப்பார்” – மாணிக்கம் தாகூர்
If the Congress hadnot submitted the letter of support Amit Shah would have put an end to the matter Manickam Tagore
தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி அளித்த ஆதரவு கடிதம் முக்கியமானது என்றும், அந்த கடிதம் வழங்கப்படாமல் இருந்திருந்தால் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தவெக அரசை கவிழ்த்திருக்க வாய்ப்பு இருந்ததாகவும் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த மாணிக்கம் தாகூர், தவெக தரப்பில் இருந்து விஜய்யை அடுத்த பிரதமராக முன்னிறுத்தி அமைச்சர்கள் தொடர்ந்து பேசி வருவது குறித்தும் கருத்து தெரிவித்தார்.
அப்போது அவர், “தவெகவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிடைத்தால் இந்தியா கூட்டணியில் அந்த கட்சியை இணைத்துக் கொள்வோம். எம்பிக்கள் இல்லாத கட்சியை கூட்டணியில் சேருமாறு நாங்கள் தொடர்ந்து அழைத்துக் கொண்டிருக்க முடியாது” என்றார்.
மேலும், விஜய்யையோ அல்லது தவெகவையோ இந்தியா கூட்டணியில் இணைப்பது தொடர்பாக தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து தவெக ஆட்சி அமைந்தபோது காங்கிரஸ் அளித்த ஆதரவு குறித்து பேசிய மாணிக்கம் தாகூர், “தேர்தலில் தவெக 107 இடங்களில் வெற்றி பெற்ற பிறகு, முதலில் விஜய்யை அழைத்துப் பேசியது ராகுல் காந்திதான். தவெக ஆட்சி அமைக்க முதல் ஆதரவு கடிதத்தை வழங்கியது காங்கிரஸ் கட்சிதான். இந்த உண்மை தவெகவில் உள்ள அனைவருக்கும் தெரியும்” என்று கூறினார்.
மேலும், “தவெக எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்க காங்கிரஸ் ஆதரவு அளிக்கவில்லை என்றால் அமித்ஷா கதையை முடித்திருப்பார். காங்கிரஸ் கடிதம் கொடுக்கவில்லை என்றால் தவெகவை உடைத்து, எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்கியிருப்பார்கள்” எனவும் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
இதற்கிடையே, தவெக அமைச்சர்கள் சிலர் விஜய்யை எதிர்கால பிரதமராக முன்னிறுத்தி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தியை தவெக தரப்பு வெளிப்படையாக ஆதரிக்கவில்லை என அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் சூழலில், மாணிக்கம் தாகூரின் இந்த கருத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
If the Congress hadnot submitted the letter of support Amit Shah would have put an end to the matter Manickam Tagore