வீட்டை விட்டு வெளியேறிய தாய் எடுத்த கொடூர முடிவு...! 3 பிஞ்சுக் குழந்தைகள் பலி... அம்சா செய்த காரியத்தால் கிராமமே அதிர்ச்சி...!
cruel decision made by mother who left home 3 young children died village shocked by what Amsa did
தர்மபுரி மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் 3 குழந்தைகள் தோட்டத்து கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.தர்மபுரி மாவட்டம் தடங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் பின்புறம் உள்ள தோட்டத்து கிணற்றில் நேற்று இரவு சுமார் 8 மணியளவில் உடல் ஒன்று மிதப்பதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர்.
இதையடுத்து அதியமான்கோட்டை காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து அங்கு விரைந்து வந்த கிராம மக்கள், கிணற்றைச் சுற்றி திரண்டனர்.அப்போது கிணற்றுக்குள் மேலும் 3 உடல்கள் மிதப்பதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனைத் தொடர்ந்து காவலர்களும், தீயணைப்பு நிலைய வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கிணற்றில் இருந்த 4 உடல்களையும் மீட்டனர்.

இந்த விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி சரவணனின் மனைவி அம்சா (35), அவரது மகள்கள் ஜீவிதா (16), நவீனா (6) மற்றும் மகன் குமரன் (3) என்பது தெரியவந்தது. மீட்கப்பட்ட உடல்கள் பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.இந்த சம்பவம் தொடர்பாக அதியமான்கோட்டை காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், கடந்த 19-ஆம் தேதி இரவு அம்சாவுக்கும் அவரது கணவர் சரவணனுக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அப்போது இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.இதனால் மனமுடைந்த அம்சா, தனது 3 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
அம்சாவின் பெற்றோர் வீடு அதே பகுதியில் இருந்ததால், அவர் அங்கு சென்றிருக்கலாம் என்றும், சிறிது நேரத்தில் வீடு திரும்பிவிடுவார் என்றும் சரவணன் நினைத்துள்ளார்.ஆனால், நீண்ட நேரமாகியும் அம்சாவும், குழந்தைகளும் வீடு திரும்பாததால் சரவணன் கவலை அடைந்துள்ளார். இதையடுத்து அம்சாவின் பெற்றோரைத் தொடர்புகொண்டு விசாரித்தபோது, அவர்கள் தங்களது வீட்டிற்கு வரவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இரு குடும்பத்தினரும் அம்சாவையும், 3 குழந்தைகளையும் பல்வேறு இடங்களில் தேடத் தொடங்கினர். கடந்த இரண்டு நாட்களாகத் தேடுதல் நீடித்த நிலையில், அம்சாவின் பெற்றோருக்குச் சொந்தமான தோட்டத்து கிணற்றில் இருந்து அம்சா மற்றும் அவரது 3 குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
முதற்கட்ட விசாரணையில், அம்சா தனது 3 குழந்தைகளையும் கிணற்றுக்குள் தள்ளிய பின்னர், அவரும் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், இந்த சம்பவத்தின் முழுமையான பின்னணி குறித்து காவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தாய் மற்றும் 3 குழந்தைகள் உயிரிழந்த இந்த துயரச் சம்பவம் தர்மபுரி மாவட்டம் முழுவதும் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
cruel decision made by mother who left home 3 young children died village shocked by what Amsa did