ஒடிசாவில் வாங்கி சென்னையில் விற்க திட்டம்...11.2 கிலோ கஞ்சா கஞ்சா கடத்தல் முறியடிப்பு...! - மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அதிரடி...!
Odisha and sell in Chennai 11point 2 kg of cannabis seized Prohibition Enforcement Division takes action
சென்னை செங்குன்றம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சந்தேகத்திற்கிடமாக பெரிய பைகளுடன் சுற்றித்திரிந்த 2 வடமாநில இளைஞர்களை பிடித்து காவலர்கள் நடத்திய சோதனையில், 11.2 கிலோ கஞ்சா சிக்கியது. இதையடுத்து, கஞ்சாவை கடத்தி வந்ததாக ஒடிசா மற்றும் பீகாரைச் சேர்ந்த 2 பேரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவலர்கள் கைது செய்தனர்.தமிழ்நாட்டை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றும் நோக்கில், மாநிலம் முழுவதும் தொடர்ந்து தீவிர கண்காணிப்பும் சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவலர்கள் இன்று காலை சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, பெரிய பைகளுடன் சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த 2 இளைஞர்களை காவலர்கள் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.
அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகம் மேலும் அதிகரித்தது.இதையடுத்து, அவர்கள் வைத்திருந்த பைகளை காவலர்கள் திறந்து சோதனையிட்டனர். அப்போது, சிறு சிறு பொட்டலங்களாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 11.2 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கஞ்சாவை கடத்தி வந்ததாக ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கிஷோர் பேபாரி மற்றும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சந்தின் குமார் ஆகிய 2 பேரையும் காவலர்கள் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட இருவரிடமும் காவலர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஒடிசா மாநிலத்தின் உள்பகுதிகளில் இருந்து குறைந்த விலைக்கு கஞ்சாவை வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
பின்னர், அந்த கஞ்சாவை சென்னை மற்றும் திருப்பூர் பகுதிகளில் வசிக்கும் வடமாநிலத் தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் இடைத்தரகர்களிடம் அதிக விலைக்கு விற்பனை செய்ய திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.ரெயில் மற்றும் பேருந்துகள் மூலம் கஞ்சாவை பல்வேறு பகுதிகளுக்கு கடத்தி வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 11.2 கிலோ கஞ்சா மற்றும் 2 செல்பேசிகளை காவலர்கள் பறிமுதல் செய்தனர்.மேலும், இந்த கடத்தலில் தொடர்புடையவர்கள் யார், கஞ்சா எங்கிருந்து பெறப்பட்டது, யாரிடம் விற்பனை செய்யப்பட இருந்தது என்பது குறித்து காவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கஞ்சா கடத்தல் தொடர்பான இந்த வலையமைப்பில் மேலும் பலர் தொடர்பில் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அவர்களை பிடிக்க செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவலர்கள் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
English Summary
Odisha and sell in Chennai 11point 2 kg of cannabis seized Prohibition Enforcement Division takes action