சபரிமலை தங்கம் கொள்ளை: நடிகர் ஜெயராமுக்கும் அமலாக்கத்துறை நோட்டீஸ்...! - விசாரணை வலை விரிகிறது!
Sabarimala gold heist Enforcement Directorate issues notice actor Jayaram well investigation net widening
சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கு தற்போது கேரள அரசியல் மற்றும் திரைப்பட உலகையே அதிரவைத்த பரபரப்பான விசாரணையாக மாறியுள்ளது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் உன்னிகிருஷ்ணன் போற்றி, தேவசம் போர்டின் முன்னாள் நிர்வாக அதிகாரி முராரி பாபு உள்ளிட்ட 12 பேரை சிறப்பு விசாரணை குழு தொடர்ச்சியாக கைது செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், கொச்சி அமலாக்கத்துறையும் தனிப்பட்ட கோணத்தில் பணமோசடி மற்றும் சொத்துச் சுழற்சி குறித்த கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு முராரி பாபுவிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தப்பட்டது.இந்த நிலையில், வழக்கில் புதிய திருப்பமாக மலையாள திரைப்பட உலகின் பிரபல நடிகர் ஜெயராமுக்கும் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல், சமீபத்தில் ஜாமீன் பெற்று திருவனந்தபுரம் சிறையிலிருந்து வெளியே வந்த உன்னிகிருஷ்ணன் போற்றியிடமும் மீண்டும் விசாரணைக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
போற்றி மீது சபரிமலை சன்னதி படிகள் மற்றும் துவார பாலகர் சிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்கத்தை ரகசியமாக பிரித்து கொள்ளையடித்ததாக கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
மேலும், கர்நாடக மாநிலம் பெல்லாரியைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் கோவர்தன், சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவன தலைமை செயல் அதிகாரி பங்கஜ் பண்டாரி ஆகியோருடன் கூட்டு சதி செய்து இந்த செயல்களில் ஈடுபட்டதாக விசாரணையில் வெளிச்சம் பார்த்துள்ளது.
அதோடு, சென்னையில் உள்ள நடிகர் ஜெயராம் இல்லத்தில் போற்றி பூஜைகள் நடத்தியதாகவும், சபரிமலையில் இருந்து கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படும் தங்கக் கவசங்களை அங்கு வைத்து வழிபாடு செய்ததாகவும் புகார்கள் எழுந்துள்ளன. எனினும், இந்த சம்பவத்துடன் தனக்கெந்த தொடர்பும் இல்லை என ஜெயராம் ஏற்கனவே மறுப்பு தெரிவித்துள்ளார்.
இருப்பினும், அவரது வீட்டில் சிறப்பு விசாரணை குழுவினர் நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.தற்போது அமலாக்கத்துறையின் அதிகாரப்பூர்வ நோட்டீஸ் கிடைத்துள்ள நிலையில், வரும் நாட்களில் நடிகர் ஜெயராம் கொச்சி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார். இதனால், இந்த வழக்கு மேலும் பல அதிர்ச்சி தகவல்களை வெளிக்கொணரும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
English Summary
Sabarimala gold heist Enforcement Directorate issues notice actor Jayaram well investigation net widening