தினசரி 1 ஜிபி டேட்டா பிளான் நிறுத்தம்! ஜியோ, ஏர்டெல் மீது நடவடிக்கை இல்லை - கைவிரித்த டிராய்!
jio airtel trai
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தனது ப்ரீபெய்ட் திட்டங்களில் இருந்து ரூ.249 மதிப்புள்ள பேக்கை நீக்கியுள்ளது. இதனால் தினசரி 1 ஜிபி டேட்டாவுடன் வரும் அடிப்படை ரீசார்ஜ் திட்டம் இனி கிடைக்காது. தற்போது ஜியோவில் குறைந்தபட்ச மாதாந்திர பேக் ரூ.299 ஆகும், இது தினசரி 1.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.
ஜியோ எடுத்த இந்த முடிவைத் தொடர்ந்து ஏர்டெலும் அதே வழியைத் தேர்ந்தெடுத்துள்ளது. நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா வழங்கிய ரூ.249 திட்டத்தை ஏர்டெல் நிறுத்தி, இனிமேல் குறைந்தபட்ச மாதாந்திர பேக் ரூ.299 ஆக இருக்கும் என அறிவித்துள்ளது. இதுவும் தினசரி 1.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது.
இந்த மாற்றங்கள் காரணமாக, குறைந்த விலையில் மாதாந்திர அடிப்படை டேட்டா ரீசார்ஜ் விருப்பம் பயனர்களுக்கு இல்லாமல் போனது. இதற்கு எதிராக நுகர்வோர் தரப்பில் சில எதிர்ப்புகள் எழுந்தன.
ஆனால், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) இந்த விவகாரத்தில் தலையிட மறுத்துள்ளது. நடத்தப்பட்ட விசாரணையில், ஜியோ மற்றும் ஏர்டெல் எதுவித தவறும் செய்யவில்லை என்று TRAI முடிவு செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் இரு நிறுவனங்களும் அறிவித்துள்ள புதிய திட்டங்களே தற்போது நடைமுறையில் அமலாகின்றன.