போர் குறித்து டிரம்ப் அறிக்கை...! 'பேச்சுவார்த்தை இல்லை' என ஈரான் மறுப்பு! நடந்தது என்ன...?
Trump statement on war Iran denies saying no talks What happened
ஈரான் மீது 5 நாட்கள் தாக்குதல் நடத்த மாட்டோம் என்றும், கடந்த இரு நாட்களாக ஈரானுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்தத் தகவலை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுப் படைகளுக்கும் ஈரான் ராணுவத்துக்கும் இடையே கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது.

இதன் விளைவாக, ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் கச்சா எண்ணெய் போக்குவரத்தை ஈரான் முடக்கியுள்ளதால், உலகளவில் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கைக்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்களைத் தகர்ப்போம் என்று ஈரான் எச்சரித்திருந்தது.
இந்தச் சூழலில், சமூக வலைதளத்தில் பதிவிட்ட ட்ரம்ப், ஈரானுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், மத்திய கிழக்கின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அடுத்த 5 நாட்களுக்கு ஈரானின் மின் மற்றும் எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் எனத் தனது படைகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஈரான் தரப்பில் சுமுக தீர்வை எட்ட விரும்புவதாகவும், ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி உயிருடன் இருக்கிறாரா என்பது தெரியவில்லை என்றும் ட்ரம்ப் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், ஈரானிய வெளியுறவுத்துறை மற்றும் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் இப்ராகிம் ரெசாய் ஆகியோர் அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று மறுத்துள்ளனர்.
ஈரான் விடுத்த எச்சரிக்கையால்தான் ட்ரம்ப் போரிலிருந்து பின்வாங்குவதாகவும், கச்சா எண்ணெய் விலையைக் குறைக்கவே அவர் இத்தகைய அறிவிப்புகளை வெளியிடுவதாகவும் ஈரான் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.
English Summary
Trump statement on war Iran denies saying no talks What happened