ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம்: கட்டணம் செலுத்த கூடாது... கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!
Strait of Hormuz Crisis US Issues Stern Warning to Global Shipping Companies
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் தீவிரமான போர்ச் சூழலால், சர்வதேச அளவில் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) ஈரான் தனது முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.
உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்திற்கும் பொருளாதாரத்திற்கும் முதுகெலும்பாக விளங்கும் இந்தப் பாதையில், கப்பல் போக்குவரத்து எவ்விதத் தடையுமின்றிச் சீராக நடைபெற வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், ஜலசந்தியைத் தனது நேரடிப் பிடியில் வைத்துள்ள ஈரான், அங்கு போக்குவரத்தைக் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் தனித்துவமான புதிய நடைமுறைகளை அமல்படுத்தத் தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.
ஈரானின் இந்த அதிரடி நடவடிக்கைகளுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, அந்த நாட்டின் முக்கியத் துறைமுகங்களை அமெரிக்கப் படைகள் தற்போது முற்றுகையிட்டுள்ளன. இப்பகுதியின் பதற்றத்தைத் தணிப்பதற்காகவும், மோதலைத் தவிர்க்கவும் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பலமுறை சமூகப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும், இரு நாடுகளுக்கும் இடையே இதுவரை எந்தவொரு சுமூகமான உடன்பாடும் எட்டப்படவில்லை. இதனால் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் தொடர்ந்து போர்ப் பதற்றமும் நிச்சயமற்ற சூழலும் நிலவி வருகிறது.
இதற்கிடையே, இந்தப் பாதை வழியாகச் செல்லும் கப்பல்கள் பாதுகாப்பாகவும் தடையின்றியும் சென்று வர ஈரான் ஒரு புதிய முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதன்படி, ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் பயணிக்கும் கப்பல்களுக்குக் கட்டணம் வசூலிக்க ஈரான் தீர்மானித்துள்ளது.
முன்னதாக அமெரிக்கா உடனான நேரடிப் போரின் காரணமாகப் பாதுகாப்புக் கருதி இந்தப் பாதையை ஈரான் முழுமையாக மூடியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது சில குறிப்பிட்ட கப்பல்கள் மற்றும் சரக்குக் கப்பல்கள் செல்ல அனுமதி அளித்து, அதற்குக் கட்டணம் வசூலிக்கும் முறையை ஈரான் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஈரானின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, சர்வதேசக் கப்பல் போக்குவரத்து நிறுவனங்களுக்கு அமெரிக்கா மிகக் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. ஈரானின் நிபந்தனைகளை ஏற்று அந்த நாட்டுக்கு எவ்விதமான கட்டணத்தையும் கப்பல் நிறுவனங்கள் செலுத்த முன்வரக்கூடாது என்று அமெரிக்கா திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது.
ஒருவேளை அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஈரானுக்குக் கட்டணம் செலுத்தும் நிறுவனங்கள், அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகளையும், சர்வதேச அளவில் சட்ட ரீதியான நடவடிக்கைகளையும் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிடிவாதம் மற்றும் மோதல் போக்குகள் சர்வதேச கடல்வழி வர்த்தகத்தைப் பெருமளவில் பாதிக்கும் என்றும், உலக சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கும் இது காரணமாகலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
English Summary
Strait of Hormuz Crisis US Issues Stern Warning to Global Shipping Companies