டிட்வா புயலினால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியா அறிவித்த ரூ.4,050 கோடி நிதியுதவியை பெற்றுக்கொள்ள இலங்கை அமைச்சரவை ஒப்புதல்..!
Sri Lankan Cabinet approves Indias Rs 4050 crore financial assistance to cyclone hit Sri Lanka
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடக்கத்தில் டிட்வா புயலின் கோரத்தாண்டவத்தால் நமது அண்டைய தீவு நாடான இலங்கை நிலைகுலைந்து போனது. பெரிதும் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியா அறிவித்த ரூ.4,050 கோடி நிதியுதவியை பெற்றுக் கொள்வதற்கு அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த டிட்வா புயலால் இலங்கையில் 643 பேர் உயிரிழந்துள்ளதோடு, ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். இலங்கையின் பெரும்பாலான இடங்களில் பெரும் சேதமும் ஏற்பட்டது. ஏற்கெனவே, கொரோனா காலகட்டத்தில் பொருளாதாரப் பின்னடைவை சந்தித்துள்ள இலங்கையில், டிட்வா புயல் பேரிடரால் ஏற்பட்ட சேதத்தை சீர்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அந்த நாடுகளின் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து உலக நாடுகள், உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்டவற்றிடம் இருந்து இலங்கை கடன் உதவி கோரியது. இதனிடையே, டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உதவிடும் வகையில், இந்திய அரசு முதலாவதாக 'ஆபரேஷன் சாகர் பந்த்' என்ற திட்டத்தின் கீழ் நிவாரண உதவிகளை செய்தது.
அதனை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பு தூதராக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை சென்று புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, அந்நாட்டு அதிபர் அநுர குமார திசாநாயக்கவையும் சந்தித்து உரையாற்றினார்.

இதையடுத்து, டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு ரூ.4,050 கோடி நிதியுதவியை இந்திய அரசு அறிவித்தது. இந்தியா வழங்கும் இந்த நிதியுதவியில் 3,150 கோடி ரூபாய் சலுகை கடன் என்றும், 900 கோடி ரூபாய் மானியமாகும்.
டிட்வாவினால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியா அறிவித்த ரூ.4,050 கோடி நிதியுதவியை பெற்றுக் கொள்வதற்கு, அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிதி, உட்கட்டமைப்பு, தகவல் தொடர்பு, சுகாதாரம், கல்வி, வீடமைப்பு மற்றும் நீர் வழங்கல் போன்ற அத்தியாவசியத் துறைகளின் சீரமைப்புக்காகப் பயன்படுத்தப்படவுள்ளதாக அறிவித்துள்ளது.
இதற்கான இருதரப்பு ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்காக நிதி அமைச்சர் என்ற ரீதியில் அந்நாட்டு அதிபர் அநுர குமார திசாநாயக்க சமர்ப்பித்த யோசனைக்கு இலங்கை அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
English Summary
Sri Lankan Cabinet approves Indias Rs 4050 crore financial assistance to cyclone hit Sri Lanka