தெற்கு லெபனானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்... பெண்கள், குழந்தைகள் உட்பட 7 பேர் பலி...!
Israeli airstrike southern Lebanon 7 people including women and children killed
லெபனானில் மீண்டும் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஹிஸ்புல்லா அமைப்பினரின் ஆதிக்கம் நிறைந்த தெற்கு லெபனான் பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இஸ்ரேலின் அண்டை நாடான லெபனானில், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் செயல்பட்டு வருகின்றனர்.

நீண்ட காலமாக இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், அவ்வப்போது இரு தரப்பினரும் பரஸ்பரம் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் இஸ்ரேலை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து இரு தரப்புக்கும் இடையேயான மோதல் தீவிரமடைந்து, பல்வேறு பகுதிகளில் தாக்குதல்கள் இடம்பெற்றன.இந்த மோதல்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததுடன், ஏராளமான பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து நீடித்த பதற்றத்தை தணிக்கும் நோக்கில் இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
எனினும், அந்த ஒப்பந்தத்தை ஹிஸ்புல்லா ஏற்கவில்லை என கூறப்படுகிறது.இதனால், இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையேயான மோதல் முழுமையாக முடிவுக்கு வராமல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இரு தரப்பினருக்கும் இடையே அவ்வப்போது நடைபெறும் தாக்குதல்களில் பொதுமக்கள் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்த சூழலில், தெற்கு லெபனானில் உள்ள நபடிஹா மாவட்டத்தை குறிவைத்து இஸ்ரேல் இன்று வான்வழித் தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஹிஸ்புல்லா அமைப்பினரின் செல்வாக்கு அதிகம் உள்ள பகுதியாக கருதப்படும் இந்த மாவட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.பொதுமக்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில், இஸ்ரேலின் தாக்குதலுக்கு லெபனான் அதிபர் ஜோசப் அரோன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் நடத்தப்படும் தாக்குதல்கள் கவலைக்குரியவை என லெபனான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினரின் உள்கட்டமைப்புகளை குறிவைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இஸ்ரேல் – ஹிஸ்புல்லா இடையேயான மோதல் மீண்டும் தீவிரமடையுமா என்ற எதிர்பார்ப்பும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.
English Summary
Israeli airstrike southern Lebanon 7 people including women and children killed