அமெரிக்கா - ஈரான் இடையே மீண்டும் நேரடி மோதல்...! ஏவுகணைத் தாக்குதலால் மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது பதற்றமான சூழல்...!
Direct conflict between America and Iran again situation Middle East currently tense due missile attack
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி மேற்கொண்ட வான்வழி தாக்குதல் மேற்காசியாவில் கடும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் வகையில், இஸ்ரேல் மற்றும் சில அரபு நாடுகளை குறிவைத்து ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த மோதல்களில் பலர் உயிரிழந்ததுடன், ஹர்முஸ் ஜலசந்தி பகுதியை ஈரான் தற்காலிகமாக மூடிய நடவடிக்கை உலக வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதற்கிடையில், பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்துவதாக அமெரிக்கா கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி அறிவித்தது. அதன் பின்னர் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பல்வேறு மட்டங்களில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பேச்சுவார்த்தையின் போது, அணு ஆயுத உற்பத்தி முயற்சிகளை ஈரான் முழுமையாக கைவிட வேண்டும் என்றும், தங்களிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்க வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.அதேநேரத்தில், ஈரான் தரப்பும் பல்வேறு நிபந்தனைகளை முன்வைத்துள்ளது.
குறிப்பாக, ஈரான் துறைமுகங்களை முடக்கும் நடவடிக்கையை அமெரிக்கா கைவிட வேண்டும், ஈரான் மீதான தாக்குதல்கள் முழுமையாக நிறுத்தப்பட வேண்டும், ஹர்முஸ் ஜலசந்தி மீது ஈரானின் கட்டுப்பாட்டை அங்கீகரிக்க வேண்டும் மற்றும் மத்திய கிழக்கில் ஈரானை ஒட்டிய பகுதிகளில் உள்ள அமெரிக்க படைகள் திரும்பப்பெறப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு தற்காலிக போர் நிறுத்தம் அமலில் இருந்தபோதிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் முழுமையாக தணியாத சூழல் நீடித்து வந்தது.இந்த நிலையில், ஈரான் மீது அமெரிக்கா இன்று திடீர் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானின் முக்கிய துறைமுக நகரமான பண்டர் அபாஸ் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஏவுகணை ஏவுதளங்கள் குறிவைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், ஹர்முஸ் ஜலசந்தி பகுதியில் இயங்கி வந்த ஈரான் கடற்படை படகுகள் மீதும் அமெரிக்கா தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கை தற்காப்பு அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், தாக்குதலால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் மற்றும் சேத விவரங்கள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.அதேவேளை, அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கையால் மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளது.
இதற்கு ஈரான் பதிலடி கொடுக்குமா? நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையில் விரிசல் ஏற்பட்டு மீண்டும் முழுமையான போர் வெடிக்குமா? என்ற அச்சமும் குழப்பமும் சர்வதேச அரங்கில் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Direct conflict between America and Iran again situation Middle East currently tense due missile attack