இந்தோனேஷியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 03 இந்தியர்கள் வழக்கில் தலையிட மத்திய அரசுக்கு டில்லி நீதிமன்றம் உத்தரவு..!
Delhi court orders central government to intervene in case of 3 Indians sentenced to death in Indonesia
இந்தியாவைச் சேர்ந்த ராஜூ முத்துக்குமரன், செல்வதுரை தினகரன் மற்றும் கோவிந்தசாமி விமல்காந்தன் ஆகியோர் இந்தோனேஷியாவில் கப்பல் கட்டும் தளத்தில் வேலைபார்த்து வந்தனர். அவர்கள் போதைப்பொருள் வைத்து இருந்ததாக, அந்நாட்டு போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
மேலும், அவர்கள் மீதான வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் கடந்த மாதம் 25-ஆம் தேதி மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து அவர்களின் மனைவிகள் மற்றும் உறவினர்கள், அவர்களை மீட்டுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், அவர்களது தங்களது சம்பளத்தை நம்பியே குடும்பம் உள்ளதாக தெரிவித்துள்ளனர். அத்துடன், அவர்களை மீட்டுத்தர மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்வர்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு தலையிட டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சச்சின் தத்தா பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தோனேஷியா சிறையில் உள்ளவர்களுக்கு சட்ட உதவி மற்றும் மேல்முறையீடு தொடர்பான தீர்வுகளை கிடைக்க அந்நாட்டிற்கான இந்தியத் தூதரகம் தகுந்த ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும், அவர்களுக்கும், இந்தியாவில் உள்ள குடும்பத்தினருடன் பேசுவதற்கான உதவியை செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அத்துடன், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்தோனேஷியா அரசை தொடர்பு கொண்டு, அவர்களின் உரிமையை காக்க தேவையான நடவடிக்கைகளை இரு தரப்பு ஒப்பந்தம் அல்லது சர்வதேச முடிவுகளின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
English Summary
Delhi court orders central government to intervene in case of 3 Indians sentenced to death in Indonesia