30 நாள் எண்ணெய் சர்ச்சை: ‘இந்திய சுதந்திரம் அடமானம்’...! - மோடி அரசை காங்கிரஸ் கடும் தாக்கு!
30 day oil dispute India independence stake Congress attacks Modi government
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. உலகின் சுமார் 20% எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் முக்கிய கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால், மத்திய கிழக்கில் இருந்து எண்ணெய் கப்பல்கள் வருவது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் வழங்க ரஷியா முன்வந்தது. ஆனால் சமீபத்தில் அமெரிக்காவுடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் ரஷிய எண்ணெய் வாங்க மாட்டோம் என்று இந்தியா உறுதி அளித்திருந்தது.
அவசர சூழலை கருத்தில் கொண்டு, ஏற்கனவே நடுக்கடலில் உள்ள கப்பல்களுக்கு மட்டும் 30 நாட்களுக்கு தற்காலிகமாக ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அனுமதி வழங்கியதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட், “இந்த 30 நாள் தளர்வு ஏற்கனவே பயணத்தில் உள்ள கப்பல்களுக்கு மட்டுமே பொருந்தும்; இதனால் ரஷியாவிற்கு பெரிய நிதி பலன் கிடையாது” என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில், “நீங்கள் புதினிடமிருந்து எண்ணெய் வாங்கலாம் என்று டிரம்ப் அனுமதி வழங்கியுள்ளார். இது டிரம்ப் தொடங்கிய புதிய அரசியல் விளையாட்டு.
அமெரிக்காவின் வெளிப்படையான அழுத்த அரசியல்தான் இது” என்று குறிப்பிட்டுள்ளார்.அதேபோல் காங்கிரஸ் மக்களவை எம்.பி மணிஷ் திவாரி, “அமெரிக்கா 30 நாள் அவகாசம் வழங்குகிறது என்ற சொற்றொடரே ஆணவத்தின் உச்சமாக உள்ளது.
இந்தியா என்ன வாழைப்பழக் குடியரசா? நமது எரிசக்தி பாதுகாப்பை தீர்மானிக்க அமெரிக்காவின் அனுமதி ஏன் தேவை?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி ரண்தீப் சிங் சுர்ஜேவாலா, “ஆபரேஷன் சிந்தூர் முதல் ரஷ்ய எண்ணெய் விவகாரம் வரை, பாஜக அரசு இந்தியாவின் சுயாட்சியை அடமானம் வைத்துவிட்டது. மத்திய அரசாக ஒன்று உண்மையில் செயல்படுகிறதா?” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
English Summary
30 day oil dispute India independence stake Congress attacks Modi government