உகாண்டாவில் பெரும் சோகம்; பள்ளிப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 20 குழந்தைகள் உட்பட 21 பேர் பரிதாபமாக உயிரிழப்பு..!
20 children tragically die in school bus accident in Uganda
கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில், தொடக்கப் பள்ளிப் பேருந்து விபத்துக்குள்ளானதில் 20 குழந்தைகள் உட்பட 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு உகாண்டாவின் கப்சோர்வா மாவட்டத்தில் உள்ள சிபி அருவிக்கு கல்விச் சுற்றுலா சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தபோது இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது. நேற்று (ஜூலை 16) இரவு இந்தப் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சாலையிலிருந்து விலகிச் சென்று, பாறையின் மீது மோதி கவிழ்ந்ததாக அந்நாட்டு காவல் துறை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

குறித்த பேருந்து விபத்தில் காயமடைந்த மூன்று நபர்கள் மற்றும் பல குழந்தைகள் உள்ளூர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இந்தப் பேருந்து உகாண்டா தலைநகர் கம்பாலாவில் அமைந்துள்ள கிங் டேவிட் ஜூனியர் ஸ்கூல் என்ற தொடக்கப் பள்ளிக்குச் சொந்தமானது என்றும் காவல் துறை தெரிவித்துள்ளது.
தற்போது விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
20 children tragically die in school bus accident in Uganda