தவெக பெண் தொண்டர்களை இழிவாக பேசிய விவகாரம்; பொன்ராஜ் மீதான வழக்குகளை ரத்து செய்ய மறுத்துள்ள உயர் நீதிமன்றம்..!
The High Court has refused to quash the cases against Ponraj in the case of insulting female TVK workers
தவெக தலைவரும், முதல்வருமான விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்த தவெக பெண் தொண்டர்களை தேர்தல் பிரச்சார காலக்கட்டத்தில் நேர்காணல் ஒன்றில் அரசியல் ஆலோசகரான பொன்ராஜு இழிவுபடுத்தும் வகையில் பேசியிருந்தார். தேர்தலில் தவெக வெற்றிப்பெற்ற நிலையில் தற்போது அமைச்சர்களாக பதவி வகி்க்கும் நிர்மல்குமார், கடலூர் ராஜ்குமார் ஆகியோர் பொன்ராஜுக்கு எதிராக கடந்த மார்ச் 26 அன்று போலீஸில் புகார் அளித்தனர்.
இந்த புகார்களின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரும், கடலூர் போலீஸாரும் பொன்ராஜ் மீது வழக்குகளைப் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி பொன்ராஜ் தாக்கல் செய்திருந்த மனுக்கள் மீதான விசாரணை, நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பாக நடந்தது.

அப்போது பொன்ராஜ் தரப்பில், மனுதாரர் உள்நோக்கத்துடன் கருத்து தெரிவிக்கவில்லை என்றும், தேர்தலுக்கு முன்பாக அளிக்கப்பட்ட புகார்களுக்கு தேர்தலுக்குப் பிறகு புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வழக்குகளைப் பதிவு செய்துள்ளதாக வாதிடப்பட்டது.
ஆனால், காவல் துறை தரப்பில், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரின் செயலாளராகப் பணியாற்றிய மனுதாரர், தற்போது அரசியல் ஆலோசகர் என கூறிக்கொண்டு, இதுபோல பெண்களை இழிவுபடுத்தி பேசியிருக்கக் கூடாது என்று சுட்டிக்காட்டினர்.
அவரது இந்த பேச்சு ஒட்டுமொத்த பெண்களையும் பொதுப்படையாக குறிக்கும் வகையில் உள்ளது என்றும், அவரது அவதூறு பேச்சுகள் தொடர்பான வீடியோக்கள் இன்னும் இணையதளங்களில் இருந்து அகற்றப்படவில்லை. எனவே, இந்த வழக்குகளை ரத்து செய்யக் கூடாது என வாதிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, தனக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்யக் கோரி பொன்ராஜ் தாக்கல் செய்திருந்த மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
English Summary
The High Court has refused to quash the cases against Ponraj in the case of insulting female TVK workers