சீறும் கடல்.. எச்சரிக்கும் கூண்டு...! நாகை துறைமுகத்தில் 1-ம் எண் கூண்டு ஏற்றப்பட்டதன் பின்னணி என்ன...?
weather change warning cage What background behind installation cage number 1 at Nagai port
மத்திய வங்கக்கடலின் சில பகுதிகளில் பலத்த காற்று வீசும் வாய்ப்பு நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதைத் தொடர்ந்து, நாகை துறைமுகத்தில் முதல் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய வானிலை அறிவிப்பின்படி, மத்திய அரபிக்கடல், தெற்கு வங்கக்கடல் மற்றும் மத்திய வங்கக்கடலின் சில பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும், சில இடங்களில் அதிகபட்சமாக 65 கிலோமீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று மாலை நாகை துறைமுகத்தில் முதல் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கடற்பகுதியில் புயல் உருவாக ஏதுவான வானிலை நிலை உருவாகி வருவதைக் கருத்தில் கொண்டு இந்த எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, நாகை மாவட்டத்தைச் சேர்ந்த விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் நாளை (செவ்வாய்க்கிழமை) வரை கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடலோர மக்கள் மற்றும் மீனவர்கள் வானிலை நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து, அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்களை முறையாகப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
weather change warning cage What background behind installation cage number 1 at Nagai port