நெம்மேலி கல்வெட்டு அகற்றப்பட்டதா...? கிளம்பிய சர்ச்சை... முற்றுப்புள்ளி வைத்த அதிகாரிகளின் அதிரடி விளக்கம்...!
Nemmeli inscription removed Action explanation officials who put end controversy
நெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் இரண்டாவது அலகு தொடர்பான அடிக்கல் கல்வெட்டு அகற்றப்பட்டதாக திமுக முன்வைத்த குற்றச்சாட்டுக்கு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரிவான விளக்கம் அளித்துள்ளனர்.சென்னையின் நீண்டகால குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில், 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் நெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

பின்னர், சென்னையின் மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் மாநகரப் பரப்பளவு விரிவடைந்ததை கருத்தில் கொண்டு, 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி திட்டத்தின் இரண்டாவது பெரிய அலகுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது அந்தத் திட்டத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
இந்நிலையில், முதலமைச்சர் விஜயின் வருகையை முன்னிட்டு, இரண்டாவது அலகின் அடிக்கல் கல்வெட்டு அகற்றப்பட்டுள்ளதாகவும், முந்தைய அரசின் அடையாளங்களை மறைக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளதாகவும் திமுக குற்றம்சாட்டியிருந்தது. மேலும், திமுக ஆட்சியில் உருவான திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்ததன் அடையாளமாக இருந்த கல்வெட்டு அகற்றப்பட்டதாகவும் விமர்சனம் எழுந்தது.
இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
அதன்படி, நெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் கல்வெட்டு அகற்றப்படவில்லை என்றும், அது பராமரிப்பு மற்றும் சீரமைப்புப் பணிக்காக தற்காலிகமாக மாற்றி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நெடுஞ்சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த கல்வெட்டு, தொடர்ந்து வாகனங்கள் செல்வதால் ஏற்பட்ட அதிர்வுகளின் காரணமாக சேதமடைந்ததாகவும், கடந்த 10 நாட்களாக அதனை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாப்புடன் பராமரிப்பு மேற்கொள்ளப்பட்டு, பணிகள் நிறைவடைந்ததும் மீண்டும் அதே இடத்தில் பொருத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Nemmeli inscription removed Action explanation officials who put end controversy