கேரளாவை புரட்டிப்போடும் பருவமழை..! அடுத்தடுத்து நேர்ந்த விபரீதம்...6 பேர் பலி ...! - மக்கள் அவதி
Monsoon rains lash Kerala series disasters 6 people dead People suffering
தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து கேரளா முழுவதும் கொட்டித் தீர்க்கும் நிலையில், மழை தொடர்பான பல்வேறு துயரச் சம்பவங்களில் சிக்கி நேற்று மட்டும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் கனமழை மாநிலத்தின் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளது.பலத்த காற்றால் மரங்கள் வேரோடு சாய்ந்தும், சாலை விபத்துகள் மற்றும் மின்சார தொடர்பான அசம்பாவிதங்கள் நிகழ்ந்தும் பல உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

இதற்கிடையில், காசர்கோடு பகுதியில் உள்ள ஒரு பள்ளியின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் உயிர் தப்பியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.திருச்சூர் மாவட்டம் மணலூரில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக தங்குமிடத்தின் மீது ராட்சத மரம் முறிந்து விழுந்தது.
அப்போது அதன் கீழ் உறங்கிக் கொண்டிருந்த 29 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள குட்டியாடி ஆற்றங்கரையில் சோகமான சம்பவம் அரங்கேறியது. துணி துவைத்துக் கொண்டிருந்த ரம்யா (36) என்பவரின் 7 வயது மகன் எதிர்பாராத விதமாக ஆற்றில் தவறி விழுந்தான்.
மகனை மீட்க தாயாரும் ஆற்றில் குதித்த நிலையில், இருவரும் பலத்த நீரோட்டத்தில் சிக்கி உயிரிழந்தனர்.காசர்கோடு மாவட்டம் ஆதூர் அருகே உள்ள சஞ்சக்கடவு பகுதியில் வீட்டின் பாதுகாப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் சகோதரர்களான முசம்மில் (14) மற்றும் முன்சிர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
எர்ணாகுளம் மாவட்டத்தில் பட்டிமட்டம் குளத்தில் குளிக்கச் சென்ற நபீல் (21) என்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். அவரை மீட்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.இதனிடையே, ஜூன் 10-ந்தேதி வரை கேரளா முழுவதும் இடி, மின்னலுடன் கூடிய பரவலான மழை தொடரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.
மேலும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.கடலோரப் பகுதிகளில் சில நேரங்களில் காற்றின் வேகம் மணிக்கு 60 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் கடுமையான முன்னெச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
English Summary
Monsoon rains lash Kerala series disasters 6 people dead People suffering