பூட்டை உடைத்து துணிச்சல் கொள்ளை...! கன்னியாகுமரி மாயம்மா கோவிலில் 14 கிலோ வெள்ளிப் பொருட்கள் அபேஸ்...!
daring robbery by breaking lock 14 kg of silver items stolen from Kanyakumari Mayamma temple
கன்னியாகுமரி அருகே உள்ள பிரசித்தி பெற்ற மாயம்மா கோவிலில் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள், 14 கிலோ வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்த பூசாரி அதிர்ச்சியடைந்தார்.
கன்னியாகுமரியில் கலங்கரை விளக்கம் அருகே மாயம்மா கோவில் அமைந்துள்ளது. வடசேரியைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் இந்த கோவிலில் பூஜைகள் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை வழக்கம்போல் பூஜை செய்வதற்காக கோவிலுக்கு வந்தபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து உடனடியாக கோவிலுக்குள் சென்று பார்த்தபோது, அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக் கிடந்தன. மேலும், மரப்பெட்டியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த வெள்ளி பூஜைப் பொருட்கள், வெள்ளிக் கவசம், வெள்ளி நாணயங்கள், வெள்ளிக் கவசம் பொருத்தப்பட்ட வலம்புரி சங்கு, கொலுசுகள் உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போயிருந்தன.
கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள், மொத்தம் 14 கிலோ எடையுள்ள வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து முத்துக்கிருஷ்ணன் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவலர்கள், சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
daring robbery by breaking lock 14 kg of silver items stolen from Kanyakumari Mayamma temple