சென்னைக்கு வெப்ப அலை எச்சரிக்கை: பிரதீப் ஜான் கணிப்பு!
Chennai Heatwave Alert Pradeep John's Forecast
தமிழகத்தில் தற்போது அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் நிலவி வருகிறது. கடந்த சில நாட்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வந்ததால், கோடை வெப்பத்தின் தாக்கம் சற்றே குறைந்து மக்கள் நிம்மதி அடைந்தனர். குளிர்ச்சியான சூழல் நிலவிய நிலையில், மீண்டும் வெப்பத்தின் அளவு அதிகரிக்கத் தொடங்கும் என்று வானிலை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, தலைநகர் சென்னையில் அடுத்த வாரம் முதல் வெயிலின் தாக்கம் மிகத்தீவிரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் (Tamil Nadu Weatherman) வெளியிட்டுள்ள சமீபத்திய கணிப்பின்படி, வரும் மே 17-ஆம் தேதி முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக உயரக்கூடும். இந்த வெப்ப அலை சுமார் 10 நாட்கள் வரை நீடிக்க வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சென்னையைப் பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலையாக 107 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாக வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
சென்னை மட்டுமின்றி, வட தமிழகத்தின் உட்புற மாவட்டங்களான வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் மே 17 முதல் வெயில் சுட்டெரிக்கத் தொடங்கும். இந்த மாவட்டங்களில் இயல்பை விட வெப்பம் அதிகமாக இருக்கும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 107 டிகிரி பாரன்ஹீட்டை எட்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
English Summary
Chennai Heatwave Alert Pradeep John's Forecast