இது என்ன இந்தியா-பாகிஸ்தான் எல்லையா?; 'தவெக எம்எல்ஏ பெரியாறு அணை படமெடுத்ததை பெரிதுபடுத்த வேண்டாம்'; கேரள வனத்துறை அமைச்சர்..!
Kerala Forest Minister says not to exaggerate the fact that TVK MLA took a picture of Periyar Dam
கம்பம் பள்ளத்தாக்கு பகுதி முதல் போக சாகுபடிக்காக முல்லை பெரியாறு அணையிலிருந்து கடந்த 08-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பெரியகுளம் தவெக சட்டப்பேரவை உறுப்பினர் க.சபரி ஐங்கரனும் பங்கேற்றார். அப்போது அவருடன் சென்ற குழுவினர், பெரியாறு புலிகள் காப்பகப் பகுதிக்குள் ட்ரோனைப் பறக்கவிட்டு, முல்லைப்பெரியாறு கால்வாய் மற்றும் வனப்பகுதிகளைப் படம் பிடித்தனர். அத பின்னர் இந்த பதிவுகள் சமூகவலைதளங்களில் பதிவிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் விதிமுறைகளை மீறி ட்ரோனை பறக்கவிட்டதாக கூறி, விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள வனத்துறையினர் தெரிவித்தனர். இது இரு மாநிலங்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று தமிழக கேரள எல்லையான குமுளியில் கேரள வனத்துறை சார்பில் 'ஊரு உணர்வு' திட்டத்தின் கீழ், பழங்குடியின மக்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில், பங்கேற்க கேரள வனத்துறை அமைச்சர் ஷிபுபேபி ஜான் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
''தமிழக எம்.எல்.ஏ -வுடன் வந்த குழுவினர், பெரியாறு அணைப் பகுதியைப் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டதாக சமூகவலைதளங்களில் கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இது என்ன இந்தியா-பாகிஸ்தான் எல்லையா? பதற்றப்படுவதற்கு. இது டிஜிட்டல் காலம். கூகுளில் தெருவாரியாகவே பார்க்க முடியும். இரு மாநிலங்களும் நல்லிணக்கத்துடன் இருக்கும் நிலையில் புதிதாக ஒரு பிரச்சினையை உருவாக்கவோ, பெரிதுபடுத்தவோ வேண்டாம்.'' என்று குறிப்பிட்டுள்ளார்.
கூட்டத்தில் பீர்மேடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சிரியக் தாமஸ், கூடுதல் முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர் பிரமோத்ஜி கிருஷ்ணன், மாவட்ட வன அலுவலர் லட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
English Summary
Kerala Forest Minister says not to exaggerate the fact that TVK MLA took a picture of Periyar Dam