100 சொகுசு கார்கள்.. 20 ஆண்டு ஆடம்பர வாழ்க்கை.. சிசிடிவியால் சிக்கிய வடமாநில வாலிபர்.!!
youth arrested for car steal in chennai
சென்னையில் உள்ள அண்ணாநகர் கதிரவன் காலனியை சேர்ந்தவர் எத்திராஜ் ரத்தினம். இவர் கடந்த மாதம் 10-ந் தேதி தனது விலை உயர்ந்த சொகுசு காரை தனது வீட்டின் வாசலில் நிறுத்தி வைத்திருந்த நிலையில், மர்ம நபர் ஒருவர், நவீன கருவிகள் மூலம் சொகுசு காரை திருடிச்சென்றுள்ளார்.
மறுநாள் காலையில் தனது வீட்டின் வாசலில் கார் இல்லாததை அறிந்து அதிர்ச்சி அடைந்த எத்திராஜ், தனது வீட்டில் கண்காணிப்பு கேமரா காட்சிகளை அடிப்படை ஆதாரமாக வைத்து சென்னை திருமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன் படி போலீசார் வழக்கு பதிவு செய்து கார் திருடனை தேடி வந்தனர்.

இந்த நிலையில் காரைத் திருடிச் சென்ற நபர் புதுச்சேரியில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து, போலீசார் விரைந்துச் சென்று திருடனை மடக்கிப்பிடித்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.
பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த சட்டேந்திரசிங் ஷெகாவத் என்பதும், இவர் ராஜஸ்தானில் இருந்து வந்து தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தங்கி சொகுசு கார்களை நோட்டமிட்டு, அதை நவீன கருவிகள் மூலம் திருடி ராஜஸ்தான், நேபாளம் பகுதிகளில் விற்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரிய வந்தது.

மேலும், இவர் இதே போன்று சுமார் 20 ஆண்டுகளாக 100-க்கும் மேற்பட்ட சொகுசு கார்களை திருடி பணம் சம்பாதித்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரிய வந்தது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் சட்டேந்திரசிங் ஷெகாவத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
English Summary
youth arrested for car steal in chennai