பாதாள சாக்கடை குழிக்குள் விழுந்த இளம் பெண்! துரிதமாக செயல்பட்டு மீட்ட பொதுமக்கள்!
young woman fell into sewerage hole in Chennai
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக தீவிரமடைந்த ஒரு நிலையில் சென்னையில் கடந்த மூன்று நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளிலும் தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் தேங்கியுள்ளது. மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் சில இடங்களில் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர்.
சில இடங்களில் மழைநீர் வடிகால்வாய் பணிகள் நிறைவடையாததால் தண்ணீர் தேங்கியுள்ளது. மழைநீர் செல்ல ஏதுவாக பல இடங்களில் பாதாள சாக்கடை குழிகள் திறக்கப்பட்டுள்ளன. இதன் வழியே சாலையில் தேங்கியுள்ள மழைநீர் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.
சாலையின் நடுவே இருக்கும் பாதாள சாக்கடை திறப்புகளை சுற்றி பாதுகாப்பு அரண் அமைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை பெரம்பூர் அடுத்த பட்டாளம் பகுதியில் சாலைகளின் நடுவே பாதாள சாக்கடைகள் மழைநீர் வடிவதற்காக திறக்கப்பட்டுள்ளன. ஆனால் அதனைச் சுற்றி எந்தவித முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு தடுப்புகள் வைக்கப்படவில்லை.
இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகனங்களும் நடந்து செல்லும் பொதுமக்களும் அச்சத்துடன் பயணம் மேற்கொள்கின்றனர். இன்று காலை இளம் பெண் ஒருவர் சாலையில் நடந்து செல்லும் பொழுது பாதாள சாக்கடை குழிக்குள் தவறி விழுந்துள்ளார். இதனைக் கண்ட பொதுமக்கள் துரிதமாக செயல்பட்டு அந்தப் பெண்ணை மீட்டுள்ளர். மயக்கம் அடைந்த நிலையில் இருந்த இளம் பெண்ணுக்கு அருகில் இருந்தவர்கள் முதல் உதவி சிகிச்சை அளித்தனர். பாதாள சாக்கடை குழிக்குள் விழுந்ததில் அந்த பெண்ணிற்கு கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. குழிக்குள் விழுந்த இளம் பெண் கண்விழிக்காததால் இருசக்கர வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த சம்பவம் பட்டாளம் பகுதியில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
English Summary
young woman fell into sewerage hole in Chennai