மாப்பிள்ளை வீட்டில் நடந்தது என்ன...? கல்யாணமான 4 நாளில் புதுப்பெண் பிணமாக மீட்பு... கொலையா...? தற்கொலையா...? தந்தை புகாரால் வெடித்த சர்ச்சை...!
What happened groom house body newlywed recovered 4 days after wedding Was it murder Suicide Controversy erupted due father complaint
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள முதல்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்டாலின் ஆரோக்கியபிரபாகர். வெளிநாட்டில் பணியாற்றி வந்த அவருக்கும், அம்மாப்பேட்டையைச் சேர்ந்த மூர்த்தியின் மகளான ஜான்சி அஞ்சலி (26) என்பவருக்கும் கடந்த 4-ஆம் தேதி உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

புதுமண வாழ்க்கை தொடங்கிய சில நாட்களிலேயே அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. திருமணம் நடைபெற்ற நான்காவது நாளான ஜூன் 8-ஆம் தேதி இரவு, மணமகன் தரப்பினர் அம்மாப்பேட்டையில் வசிக்கும் ஜான்சி அஞ்சலியின் தந்தை மூர்த்தியை தொலைபேசியில் தொடர்புகொண்டு, ஜான்சி அஞ்சலி தூக்கிட்டு உயிரிழந்துவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தி குடும்பத்தினரையும் உறவினர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தனது மகளின் உயிரிழப்பில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாகவும், மர்மமான சூழ்நிலைகள் நிலவுவதாகவும் கருதிய மூர்த்தி, பட்டுக்கோட்டை தாலுகா காவலர்களிடம் புகார் அளித்தார்.
அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த காவலர்கள், பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர். மேலும், திருமணமாகி நான்கே நாட்களில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், பட்டுக்கோட்டை உதவி ஆட்சியரும் தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தி வருகிறார்.
புதுமணப் பெண்ணின் திடீர் உயிரிழப்பு சம்பவம் பட்டுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
What happened groom house body newlywed recovered 4 days after wedding Was it murder Suicide Controversy erupted due father complaint