3000 ஆண்டுகளுக்கு முந்தைய கோவை எப்படி இருந்தது...? செஞ்சேரிமலை குன்றுகளில் அரிய பாறை ஓவியங்கள், கற்கருவிகள் கண்டுபிடிப்பு...!
What Coimbatore 3000 years ago Rare rock paintings and stone tools discovered Sencherimalai hills
கோவை மாவட்டத்தின் வரலாற்றுப் பெருமையை உலகறியச் செய்யும் வகையில், செஞ்சேரிமலை பகுதியில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பாறை ஓவியங்கள் மற்றும் நுண்கற்கால கருவிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த அரிய கண்டுபிடிப்பு தொல்லியல் ஆய்வாளர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே வெள்ளலூர் பகுதியில் பழங்கால நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டதையடுத்து, அந்தப் பகுதியை அகழாய்வு மண்டலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேபோல் மதுக்கரை மற்றும் நீலகிரி மலைப்பகுதிகளில் காணப்படும் பாறை ஓவியங்கள் பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்டவை என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை செஞ்சேரிமலை அருகேயுள்ள ஜல்லிப்பட்டியைச் சேர்ந்த உமாமகேஸ்வரி என்ற மாணவி, சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறையில் இறுதியாண்டு பயின்று வருகிறார். தனது களஆய்வின் போது செஞ்சேரிமலை கிராமத்தின் சின்னமலை பகுதியில் அரிய பாறை ஓவியங்கள் மற்றும் நுண்கற்கால கருவிகளை அவர் கண்டறிந்துள்ளார்.
இந்த கண்டுபிடிப்பை சென்னைப் பல்கலைக்கழகமும் அங்கீகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சின்னமலை மற்றும் செஞ்சேரிமலை குன்றுப் பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ள பாறை ஓவியங்கள் அடர் சிவப்பு நிற மண் சாயத்தால் வரையப்பட்டுள்ளன. அதேபோல் பல்வேறு வடிவமைப்புகளைக் கொண்ட நுண்கற்கால கருவிகளும் அங்கு கிடைத்துள்ளன.
இக்கண்டுபிடிப்புகள் கோவை மண்டலத்தின் தொன்மையான பண்பாட்டு மரபையும் மனித வாழ்வியல் வரலாறையும் வெளிச்சமிட்டுக் காட்டுவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.வடிவியல் ஆய்வில், கட்டைவிரல் நகம் போன்ற வடிவம் கொண்ட கற்கால கருவிகள் மற்றும் துளையிடும் கருவிகள் கண்டறியப்பட்டுள்ளன.
இவை இந்திய நுண்கற்கால நாகரிகத்தின் முக்கிய அடையாளங்களாக விளங்குகின்றன என்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறையின் அகழாய்வு பொறுப்பாளர் டாக்டர் ஜினு கோஷி தெரிவித்துள்ளார்.மேலும், இந்த பாறை ஓவியங்களும் கற்கால கருவிகளும் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனித சமூகத்தினரால் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
இதனுடன், செஞ்சேரிமலை மந்திரகிரி வேலாயுதசுவாமி கோவிலில் கி.பி. 1339-ஆம் ஆண்டைச் சேர்ந்த ஹொய்சாலா மன்னர் கால கல்வெட்டும் காணப்படுகிறது. அதேபோல் சின்னமலையில் அமைந்துள்ள சுந்தரராஜப் பெருமாள் கோவில் நாயக்கர் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த வரலாற்றுச் சின்னமாக திகழ்கிறது.
கோவிலின் பின்புறம் அமைந்துள்ள பாறைக் குகை, பல நூற்றாண்டுகளாக அந்த மலையின் தொன்மை வரலாற்றை அமைதியாக சுமந்து நிற்கிறது.பாலக்காட்டு கணவாய் வழியாக கால்நடைகளை அழைத்துச் சென்ற கற்கால மனிதக் குழுக்கள், இந்த மலைப்பகுதிகளை தற்காலிக முகாம்களாகவும் பருவகால தங்குமிடங்களாகவும் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
மேலும், மலையில் கிடைத்த கற்களை ஆயுதங்களாகவும் அன்றாட பயன்பாட்டு கருவிகளாகவும் வடிவமைத்து பயன்படுத்தியதற்கான சான்றுகளும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதுகுறித்து மாணவி உமாமகேஸ்வரி கூறுகையில், வரலாற்றுச் சிறப்பு மிக்க பாறை ஓவியங்கள் போதிய பாதுகாப்பின்றி இருப்பதாக வேதனை தெரிவித்தார்.
அங்கு வருகை தரும் சிலர் பாறைகளின் மீது அடையாளக் குறிகளை வரைவதால், அரிய வரலாற்றுச் சின்னங்கள் சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.எனவே தொல்லியல் துறையும் சுற்றுலாத்துறையும் இணைந்து இந்த தொன்மைச் சின்னங்களை பாதுகாத்து, அவற்றின் வரலாற்றுப் பெருமையை வருங்கால தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
புதிதாக கண்டறியப்பட்டுள்ள இந்த பாறை ஓவியங்களும் கற்கால கருவிகளும், கோவையின் தொன்மை வரலாற்றுக்கு மேலும் ஒரு மகுடமாக அமைந்துள்ளதுடன், தமிழர் நாகரிகத்தின் ஆழமான வேர்களை உலகுக்கு எடுத்துரைக்கும் அரிய சான்றுகளாக திகழ்வதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
What Coimbatore 3000 years ago Rare rock paintings and stone tools discovered Sencherimalai hills