'வன கிராம மக்களை வெளியேற்றப் பார்த்தால் சும்மா இருக்க மாட்டோம்'...! - தமிழக அரசுக்கு சீமான் கடும் எச்சரிக்கை...!
We will not remain idle if we see people forest villages being evicted Seeman warns Tamil Nadu government
தேனி மாவட்டம் மேகமலை மற்றும் வருசநாடு பகுதிகளில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் மலைவாழ் மக்களை அவர்களின் பூர்வீக வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வட்டத்துக்குட்பட்ட தும்மக்குண்டு, மேகமலை உள்ளிட்ட 98 மலைக்கிராமங்களில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தலைமுறை தலைமுறையாக வசித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.இந்நிலையில், தங்களின் பூர்வீக நிலங்களையும் வாழ்விடங்களையும் விட்டு அவர்களை வெளியேற்ற முயற்சிப்பது மிகுந்த வேதனை அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேகமலை மற்றும் வருசநாடு வனப்பகுதிகளில் வசித்து வரும் மலைவாழ் மக்கள் கடந்த நூற்றாண்டுக்கும் மேலாக இலவம், முந்திரி, மிளகு, ஏலம் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை சாகுபடி செய்து தங்களது வாழ்வாதாரத்தை நிலைநிறுத்தி வருகின்றனர்.மலைகளையும், காடுகளையும் தங்களது வாழ்வின் ஓர் அங்கமாகக் கருதி வாழும் இம்மக்கள், இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை முறையை தலைமுறை தலைமுறையாக கடைப்பிடித்து வருகின்றனர்.
வன உயிரினங்களின் எண்ணிக்கை பல்வேறு காரணங்களால் குறைந்து வரும் நிலையில், மனிதர்களுடன் இணைந்து வாழும் கால்நடைகளும் இயற்கைச் சமநிலையை பேணுவதில் முக்கிய பங்கு வகிப்பதாக சீமான் குறிப்பிட்டுள்ளார்.மலைவாழ் மற்றும் பழங்குடியின மக்கள் காடுகளையும், மலைகளையும், அங்கு வாழும் உயிரினங்களையும் பாதுகாத்தபடியே தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
நவீன உலகின் பல்வேறு வசதிகளைத் துறந்து, இயற்கையோடு ஒன்றிணைந்து வாழும் இவர்களின் வாழ்க்கை முறை போற்றத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இயற்கையைச் சார்ந்து வாழ்ந்து வந்தபோதிலும், அவர்களின் வாழ்வியல் முறைகள் இயற்கையை அழிக்கும் வகையில் அமைந்ததில்லை. மாறாக, சுற்றுச்சூழலுடன் இணக்கமாக வாழும் வாழ்க்கை முறையையே அவர்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றனர்.
இத்தகைய மக்களை அவர்களது வாழ்விடங்களில் இருந்து அப்புறப்படுத்துவது வனத்தையும் இயற்கையையும் பாதுகாக்க உதவாது. மாறாக, எதிர்காலத்தில் அந்தப் பகுதிகளில் இயற்கைச் சீரழிவுக்கு வழிவகுக்கும் என சீமான் தெரிவித்துள்ளார்.மலைகள் மற்றும் காடுகளின் இயற்கை வளங்களுக்கு உண்மையான பாதிப்பு ஏற்படுத்துவது அங்கு தலைமுறைகளாக வாழ்ந்து வரும் மலைவாழ் மக்கள் அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வணிக நோக்கில் அமைக்கப்படும் தொழிற்சாலைகள், தொலைத்தொடர்பு கட்டமைப்புகள், மின்கோபுரங்கள், ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டுமான நடவடிக்கைகளே மலைகள், காடுகள், நீர்நிலைகள் மற்றும் வன உயிரினங்களின் வாழ்விடங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இத்தகைய நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கிவிட்டு, பல தலைமுறைகளாக அங்கு வாழ்ந்து வரும் பழங்குடியின மற்றும் மலைவாழ் மக்களை மட்டும் வெளியேற்றுவது நியாயமற்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும், அவர்களை வெளியேற்றிய பின்னர் அந்த நிலங்களை தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமிக்கும் சூழல் உருவாகி, இயற்கை வளங்கள் மேலும் சீரழியும் அபாயம் ஏற்படக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மலைக்காடுகளையும் வன உயிரினங்களையும் உண்மையாக பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறை அரசுக்கு இருந்தால், காடுகளில் நடைபெறும் சட்டவிரோத மரவெட்டையும், மரக்கடத்தலையும் முதலில் தடுத்து நிறுத்த வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார்.
மேலும், சொகுசு விடுதிகள், அடுக்குமாடி கட்டிடங்கள், சாலைகள், தண்டவாளங்கள், தொழிற்சாலைகள், தொலைத்தொடர்பு அமைப்புகள் மற்றும் ஆய்வுக்கூடங்கள் அமைப்பதற்காக வனப்பகுதிகள் சுருக்கப்படுவதையும், வன உயிரினங்களின் இயற்கையான வாழ்விடங்களும் இடம்பெயர்வு வழித்தடங்களும் அழிக்கப்படுவதையும் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எனவே, கடந்த 2006-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வன உரிமைச் சட்டத்தின் அடிப்படையில், தேனி மாவட்டம் மேகமலை மற்றும் வருசநாடு பகுதிகளில் வசிக்கும் வனக்கிராம மக்களுக்கு உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் மக்களை அவர்களது பூர்வீக வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றும் முடிவை உடனடியாக கைவிட்டு, அவர்களின் வாழ்வாதாரத்தையும் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
We will not remain idle if we see people forest villages being evicted Seeman warns Tamil Nadu government