குருவிக்காரர் சமூகம், குறவர் இனம் வேறு என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் - தமிழக அரசுக்கு தேமுதிக வலியுறுத்தல்..!
Vijayakanth Statement about Kuravar
குருவிக்காரர் சமூகம், குறவர் இனம் வேறு என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
குருவிக்காரர் சமூகமும், குறவர் இனமும் வேறு என்பதை உலகறிய செய்வதுடன் அவர்களுக்கான நலத்திட்டங்களையும் தமிழக அரசு வழங்கிட வேண்டும். தமிழ் கடவுளான முருகனின் மனைவியாக அறியப்படும் குறவர் மகள் வள்ளியின் வம்சாவழிகளாக குறவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர்.
மராட்டிய பிராந்தியத்தில் இருந்து தமிழகத்துக்கு புலம் பெயர்ந்து ஊசி மணி, பாசி மணி விற்கும் குருவிக்காரர் மக்களை குறவர் என்று அடையாளப்படுத்துவது முறையல்ல. பழந்தமிழ் வரலாற்றுக்கு சொந்தக்காரர்களான குறிஞ்சி நிலத்து குறவர் சமுதாயத்தின் தலைமுறைகள், அவர்களது சொந்த மண்ணிலே அகதிகளாக வாழும் நிலை உருவாகி உள்ளது.
குருவிக்காரர் சமூகத்தை பட்டியல் இனத்தில் இணைப்பதை தே.மு.தி.க. வரவேற்கிறது. அதே சமயம், குருவிக்காரர் மக்களை குறவர் என்று அடையாளப்படுத்துவதன் காரணமாக குறவர் சமுதாயத்தினர், அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் சலுகைகளை பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, குறவர் சமுதாயத்துக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராகவும், அவர்களின் இன அழிப்பு செய்வதை தடுக்கும் பொருட்டும், குருவிக்காரர் சமூகத்தையும், குறவர் இனத்தையும் வேறுபடுத்தி உலகறிய செய்வதுடன், அவர்களுக்கான நலத்திட்டங்களையும் தமிழக அரசு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Vijayakanth Statement about Kuravar