தலித் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள்! திருமாவளவன் எழுப்பிய கேள்வியும், அமைச்சர் அளித்த பதிலும்!
VCK Thirumavalavan Received Answer 9 Feb 2021
தலித் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. அதைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன ? - என மக்களவையில் விசிக தலைவரும், சிதம்பரம் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் வினா எழுப்பியிருந்தார்.
அதற்கு உள்துறை இணை அமைச்சர் கிஷன்ரெட்டி அளித்துள்ள எழுத்துப்பூர்வமான பதிலானது, "காவல்துறையும், சட்டம் ஒழுங்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையின் படி மாநில அரசின் அதிகாரப் பட்டியலில் வருகின்றன. சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது மாநில அரசின் பொறுப்பாகும்.
தேசிய குற்ற ஆவண மையம் (NCRB) இத்தகைய வன்கொடுமைகள் குறித்த விவரங்களை அறிக்கை மூலமாக ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. 2019ஆம் ஆண்டு கடைசியாக அதன் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசு குற்றவியல் நடைமுறை திருத்தச் சட்டம் 2018 ஐ இயற்றியுள்ளது. அதில் தலித் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கான தண்டனையும் வரையறுக்கப்பட்டிருக்கிறது.
12 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை வரை அதில் வரையறுக்கப்பட்டிருக்கிறது. பாலியல் வன்கொடுமை வழக்கில் 2 மாதங்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும், இரண்டு மாதங்களுக்குள் விசாரணை முடித்து தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
VCK Thirumavalavan Received Answer 9 Feb 2021