வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழக்கு.. உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு.!!
vanniyar case mar 31
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அதிமுக அரசு சட்டம் இயற்றியது. இதன் பிறகு தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, 10.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு திமுக அரசு அரசாணை வெளியிட்டு, சட்டத்தை அமல்படுத்தியது.
இந்த சட்டத்தை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சாதிவாரியான கணக்கெடுப்பு முறையாக நடத்திய பின்னரே இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும். அவ்வாறு முறையாக கணக்கெடுக்காமல் எப்படி இட ஒதுக்கீட்டை வழங்க முடியும் என கேள்வி எழுப்பினர்.
அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக இந்த சட்டம் அவசரமாக ஏற்பட்டதாக கூறிய நீதிபதிகள், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியருக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு தந்தது செல்லாது என தீர்ப்பளித்து. வன்னியருக்கான இட ஒதுக்கீடு அரசாணை ரத்து செய்து உத்தரவிட்டது.
இதையடுத்து, தமிழக அரசு சார்பிலும், பாமக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது தமிழக அரசு தரப்பில், நடைமுறையில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டை மீறாமல், 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த உள் ஒதுக்கீடு வன்னியர் உட்பட ஏழு பிரிவினருக்கானது என தெரிவிக்கப்பட்டது.
அரசியல் சட்டத்தின்படி உள்ஒதுக்கீடு தந்து சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் இருப்பதாகவும், ஏற்கனவே இஸ்லாமியர் மற்றும் அருந்ததியினருக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது. தற்போது அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தேதியை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இந்நிலையில், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர் கவாய் அமர்வு இன்று தீர்ப்பளிக்க உள்ளது.