திண்டிவனம் நகராட்சியில் பரபரப்பு: கதி.மு.க. கவுன்சிலர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பட்டியலின அதிகாரி
Uproar in Tindivanam Municipality Listed officer falls at KMC councilor feet and apologizes
திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் நிகழ்ந்த சம்பவம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சியில், பட்டியலின சமூகத்தை சேர்ந்த முனியப்பன் என்ற இளநிலை உதவியாளர் பணிபுரிந்து வருகிறார். கடந்த 28-ஆம் தேதி, நகராட்சி அலுவலகத்திற்கு 20-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ரம்யா ராஜா வந்து, தனது பகுதியில் நடைபெற்ற பணிகளுக்கான நிதி தொடர்பான கோப்பை கேட்டதாக கூறப்படுகிறது.
அப்போது, முனியப்பன் தெளிவான பதில் அளிக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், கவுன்சிலர் ரம்யா ராஜா, “ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.
இச்சம்பவத்துக்குப் பின்னர், கவுன்சிலர் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்து, முனியப்பன் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார். இதையடுத்து, நகராட்சி ஆணையர் இல்லாத நிலையில், அவரின் அறைக்கு முனியப்பன் அழைக்கப்பட்டார். அங்கு நகரமன்ற உறுப்பினர்கள் மற்றும் சில அதிகாரிகள் முன்னிலையில் அவரிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.
இந்த விசாரணையின் போது, முனியப்பனை ரம்யா ராஜாவிடம் மன்னிப்பு கேட்குமாறு கூறினர். அதற்கு, முனியப்பன் "மன்னித்து விடுங்கள்" என வேண்டுகோள் விடுத்தார். ஆனால், “மன்னிப்பு கேட்டால் போதுமா?” என்று மீண்டும் வலியுறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து மனஉளைச்சலுடன் இருந்த முனியப்பன் தானாகவே சென்று, கவுன்சிலர் ரம்யா ராஜாவின் காலில் விழுந்து கதறி அழுதபடி மன்னிப்பு கேட்டார்.
இந்த சம்பவம் குறித்த விடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தை கண்ட பலர், நகராட்சி ஊழியரை இவ்வாறு அவமானப்படுத்திய கவுன்சிலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
Uproar in Tindivanam Municipality Listed officer falls at KMC councilor feet and apologizes