மா சாகுபடி மந்தம்! மாம்பழ விவசாயிகளுக்கு எதிர்பாரா குட் நியூஸ்.! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!
Unexpected good news for mango farmers Important announcement by the Tamil Nadu government
தமிழகத்தில் மாம்பழ பருவம் இப்போது உச்ச கட்டத்தில் உள்ளது. குறிப்பாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மாம்பழ உற்பத்தி கடந்த ஆண்டைவிட வெகுவாக அதிகரித்துள்ளது. ஆனால், அதிக மகசூல் கிடைத்ததற்குப் பதிலாக, விலை சரிவால் விவசாயிகள் கடும் நட்டத்தில் சிக்கியுள்ளனர்.
தற்போது, ஒரு கிலோ மாம்பழம் ரூ.1 முதல் ரூ.4 வரை மட்டுமே விலை பெறுகின்றது. இதனால் மகசூலை விற்றும் செலவுக்கூட வசூலிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பலர் சாலையோரங்களில் மாம்பழங்களை வீசி எறிய நேரிடும் அவல நிலை உருவாகியுள்ளது. கடந்த ஆண்டில் ஒரு குவிண்டால் மாம்பழம் ரூ.12,000 வரை விற்ற நிலையில், இந்த ஆண்டு அதே அளவுக்கு விலை ரூ.3,000-க்கு கீழே சரிந்துள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது சுமார் 1.46 லட்சம் ஹெக்டேரில் மா சாகுபடி நடைபெறுகின்றது. இதிலிருந்து 9.5 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி பெறப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. முக்கியமாக கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தருமபுரி, திருவள்ளூர், தேனி, திருப்பத்தூர், சேலம், வேலூர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் மா சாகுபடி பெரும்பாலும் நடைபெறுகிறது.
மாம்பழ வகைகளில் பெங்களூரா, பங்கனபள்ளி, அல்போன்சா, ருமானி, செந்தூரா, நீலம், இமாம்பசந்த் ஆகிய இரகங்கள் அதிகமாக பயிரிடப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை ஆண்டுக்கு ஒரு முறை அதிக மகசூல் கொடுத்து, அடுத்த ஆண்டு குறைவாக மகசூல் அளிக்கும் சுழற்சி இயற்கையாகவே காணப்படுகிறது.
மகசூல் அதிகரிப்பு – விலை குறைவு
நடப்பாண்டில் பருவநிலை சாதகமாக இருந்ததால், ஒரு ஹெக்டேருக்கு சராசரியாக கிடைக்கும் மகசூல் 5-6 மெட்ரிக் டனில் இருந்து 8 மெட்ரிக் டன் வரை உயர்ந்துள்ளது. இதன் காரணமாகவே விலை விழுதளவில் சரிந்துள்ளதாக கூறப்படுகிறது.
பதப்படுத்தும் நிறுவனங்களின் பிரதான கொள்முதல் இலக்கு – பெங்களூரா இரகம், தற்போது கிருஷ்ணகிரியில் மட்டும் தான் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், இந்த நிறுவனங்கள் கடந்த ஆண்டிலேயே மாம்பழக்கூழ் அதிகமாக தயாரித்து கையிருப்பாக வைத்துள்ளதால், இப்போதைய மகசூலை கொள்முதல் செய்ய ஆர்வமின்றி குறைந்த விலையில் வாங்குகின்றன என்று விவசாயிகள் குற்றச்சாட்டுகின்றனர்.
அரசின் உடனடி நடவடிக்கை
விவசாயிகள் எழுப்பிய புகாரினை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் தலைமையில், மா பதப்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகள் இடையே கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இதில், மாம்பழக் கூழ் தயாரிக்கும் நிறுவனங்களிடம், பெங்களூரா மா இரகத்தை உடனடியாக நியாயமான விலையில் கொள்முதல் செய்ய வேளாண்மை உற்பத்தி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், ஜூன் 20க்குப் பிறகு மா இனிப்புத் தன்மை (TSS) 20° Brix அளவிற்கு மேல் இருக்கும் என்பதால், அந்த நேரத்திலிருந்து கொள்முதல் அதிகரிக்கப்படும் என பதப்படுத்தும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
விவசாயிகள் கோரிக்கைகள்
விவசாயிகள், ஒரு கிலோ மாம்பழத்திற்கு குறைந்தபட்சம் ₹13 கொள்முதல் விலை நிர்ணயிக்க வேண்டும் என்றும், மிகுந்த நட்டம் அடைந்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ₹30,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு தற்காலிக நடவடிக்கைகளை எடுத்து கொள்முதல் செயல்முறைகளை தொடங்கியிருக்கும் நிலையில், விவசாயிகள் இந்த பருவத்தில் குறைந்தபட்ச ஆதாயம் பெறுவது என்பது தற்போது எழுந்திருக்கும் முக்கியமான கேள்வியாக உள்ளது.
மாம்பழ உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் பாதுகாக்க, நிலையான கொள்முதல் விலை மற்றும் நிபந்தனை இல்லா நிவாரணத் திட்டங்கள் உடனடியாக அமலுக்கு வர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
English Summary
Unexpected good news for mango farmers Important announcement by the Tamil Nadu government