இபிஎஸ்-ஐ வறுத்தெடுத்த த.வெ.க...! - 'உங்கள் சாம்ராஜ்யம் சரிவதற்கு நாங்கள் காரணமல்ல'...!
Tvk roasts EPS We not reason collapse your empire
தமிழக சட்டசபை தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று அரசியல் அரங்கில் மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்த தவெக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டுகள் மற்றும் ஐயூஎம்எல் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது.தேர்தலுக்கு பின்னர் அ.தி.மு.க.வில் கடும் உள்கட்சிப் பிளவு ஏற்பட்டது.
எடப்பாடி பழனிசாமி தரப்பு மற்றும் எஸ்.பி. வேலுமணி தரப்பு என இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வரும் சூழலில், அ.தி.மு.க.வை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிகழ்வை கடுமையாக விமர்சித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “தமிழக அரசியலில் கீழ்த்தரமான குதிரைப்பேர கலாசாரத்தை தவெக அறிமுகப்படுத்தியுள்ளது” என்று குற்றம்சாட்டியிருந்தார்.இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு தவெக தகவல் தொழில்நுட்பப் பிரிவு கடுமையான பதிலடி வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக தவெக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தனது எக்ஸ் தள பதிவில், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ராஜினாமா கடிதத்தை தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகரிடமே வழங்க வேண்டும் என்ற அடிப்படை ஜனநாயக நடைமுறையைக்கூட அறியாத ஒருவர், பலமுறை ஆட்சி செய்த கட்சியின் பொதுச்செயலாளராக இருப்பது தமிழக மக்களை எள்ளி நகையாட வைத்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “ஒரு சட்டமன்ற உறுப்பினர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமெனில், சட்டமன்றச் செயலகத்திற்கே நேரில் சென்று கடிதம் வழங்க வேண்டும் என்பதே நடைமுறை. இந்த அடிப்படை விஷயம்கூட தெரியாமல் விமர்சனம் செய்வது அரசியல் குழப்பத்தின் வெளிப்பாடாகும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.தொடர்ந்து, “தொடர் தேர்தல் தோல்விகளால் விரக்தியடைந்து மற்றவர்களை குற்றம்சாட்டுவது அரசியல் முதிர்ச்சியற்ற அணுகுமுறை.
சரிந்து வரும் அரசியல் ஆதரவை மறைக்க தவெக மீது பழி சுமத்த முயல்வது பலனளிக்காது” என்றும் பதிவில் சாடப்பட்டுள்ளது.அதேபோல், “பலவீனமான தலைமையின் கீழ் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் சூழலில், அந்த கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கே தங்கள் தலைமையின் மீது நம்பிக்கை இல்லாத நிலை உருவாகியுள்ளது.
தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் நமது தலைவரின் செயல்திறனை நம்பியே அவர்கள் சுய விருப்பத்தின் பேரில் தவெகவில் இணைந்துள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், “பொதுவாக கட்சி மாறும் அரசியல்வாதிகள் தங்களது எம்.எல்.ஏ. பதவியை காப்பாற்றிக்கொள்ள முயல்வார்கள். ஆனால் இங்கு, தங்களது பதவியையே துறந்து மீண்டும் மக்களின் தீர்ப்பை சந்திக்க தயாராக அவர்கள் வந்துள்ளனர்.
இது தார்மீக அரசியலின் வெளிப்பாடு” என்றும் கூறப்பட்டுள்ளது.அதோடு, “கூவத்தூரில் என்ன நடந்தது என்பதை தமிழகம் மறந்துவிடவில்லை. அப்போது சொகுசு விடுதிகளில் அடைத்து வைத்து பதவியை பாதுகாக்க நடத்தப்பட்ட அரசியல் நாடகங்களையும் மக்கள் நினைவில் வைத்துள்ளனர்.
ஆனால் இன்று, மக்கள் மன்றத்தை மீண்டும் சந்திக்க துணிவுடன் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து வந்துள்ளார்கள்” எனவும் பதிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இறுதியாக, “தேர்தலில் மக்கள் உங்களை நிராகரித்துவிட்டார்கள்.
தற்போது உங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களே உங்களை விட்டு விலகி வருகின்றனர். எங்களின் முழு கவனமும் மக்கள் நலன் மற்றும் தமிழகத்தின் முன்னேற்றத்தின் மீதே உள்ளது” என்று தவெக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தனது பதிவில் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.
English Summary
Tvk roasts EPS We not reason collapse your empire