கன்னியாகுமரியில் கொந்தளிப்பு! ராணுவ வீரர் கண்முன்னே மகள் பலி! - அதிவேக லாரி மோதிய கோர விபத்து...!
Turmoil Kanyakumari Army soldier daughter dies front him Horrible accident involving speeding lorry
கன்னியாகுமரி மாவட்டம் களியல் அருகிலுள்ள சிற்றாற்றின்கரை பகுதியைச் சேர்ந்த கிறிஸ்துராஜ், நாட்டின் எல்லைகளை காக்கும் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு, தனது மகள் ஹாட்லின் அபினாவுடன் இருசக்கர வாகனத்தில் தக்கலை வழியாக பயணம் மேற்கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில், தக்கலை காவல் நிலையம் முன்பாக சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் அதிவேகமாக வந்த கனிம வளங்கள் ஏற்றிய கனரக லாரி, எதிர்பாராத விதமாக அவர்களின் வாகனத்தில் மோதியது.இந்த கோர விபத்தில், லாரியின் சக்கரம் ஏறியதால் தலையில் கடுமையான காயம் அடைந்த ஹாட்லின் அபினா, தந்தையின் கண்முன்னே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கிறிஸ்துராஜ் பலத்த காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். நாட்டை பாதுகாக்கும் வீரரின் மகள் இவ்வாறு விபத்தில் பலியானது அப்பகுதி மக்களை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.இந்த விபத்து செய்தி பரவியதும், நாம் தமிழர் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கடும் அதிருப்தியுடன் சம்பவ இடத்திற்கு திரண்டனர்.
விபத்தை ஏற்படுத்திய லாரியை முற்றுகையிட்டு, கட்டுப்பாடின்றி அதிவேகமாக இயங்கும் கனிமவள லாரிகள் காரணமாக விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகின்றன எனக் குற்றம்சாட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்தச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட மேலதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் நள்ளிரவு வரை பேச்சுவார்த்தை நடத்தினர். விபத்துக்குக் காரணமான லாரி ஓட்டுநர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கனிமவள லாரிகளின் வேகத்தைக் கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், காவல் நிலையம் முன்பாகவே நிகழ்ந்த இந்த துயர சம்பவமும், அதைத் தொடர்ந்து வெடித்த போராட்டமும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
உயிரிழந்த ஹாட்லின் அபினாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவலர்கள் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.
English Summary
Turmoil Kanyakumari Army soldier daughter dies front him Horrible accident involving speeding lorry