டிரான்ஸ்பார்மரில் பழுது பார்த்தபோது கொடூரம்...! தூக்கி வீசப்பட்ட மின்வாரிய ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு...! - சோகத்தில் மூழ்கிய குடும்பம்
tragedy occurred while repairing transformer electricity board employee thrown and died spot family mourning
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே டிரான்ஸ்பார்மரில் பழுதுநீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மின்வாரிய ஊழியர் உயர் மின்னழுத்த தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.செம்பனார்கோவில் மேலப்பாதி நடுக்கரை பகுதியைச் சேர்ந்த கணேசன் (49), செம்பனார்கோவில் மின்வாரிய அலுவலகத்தில் ஒயர்மேனாக பணியாற்றி வந்தார்.
நேற்று இரவு முடிகண்ட நல்லூரில் அமைந்துள்ள மின்மாற்றியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்யும் பணிக்காக அவர் சென்றிருந்தார்.பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்த வேளையில், எதிர்பாராதவிதமாக உயர் மின்னழுத்த கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கடுமையான மின்தாக்குதலுக்கு உள்ளான கணேசன் பலத்த அதிர்வுடன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இந்த தகவல் கிடைத்ததும் செம்பனார்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரகுராமன் தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் கணேசனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த துயரச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, மின்தாக்குதல் ஏற்பட்ட சூழ்நிலைகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பது குறித்து காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த கணேசனுக்கு ஹேமா (40) என்ற மனைவியும், தனலட்சுமி (13) என்ற மகளும், முத்துக்குமரன் (12) என்ற மகனும் உள்ளனர். குடும்பத்தின் ஆதாரமாக இருந்த கணேசனின் திடீர் மரணம் அவரது உறவினர்கள் மட்டுமின்றி, செம்பனார்கோவில் சுற்றுவட்டார மக்களையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
English Summary
tragedy occurred while repairing transformer electricity board employee thrown and died spot family mourning