காவிரி நீர்ப் பங்கீடு: டெல்லியில் நாளை கூடும் ஒழுங்காற்று குழு... எதிர்பார்ப்பில் விவசாயிகள்...!
Cauvery water sharing Regulatory committee to meet Delhi tomorrow Farmers anticipation
காவிரி நீர் பங்கீடு தொடர்பான முக்கிய முடிவுகளை மேற்கொள்ளும் காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழுவின் 139-வது கூட்டம் நாளை டெல்லியில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான காவிரி நீர் திறப்பு குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது.சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம் வழக்கமாக மாதம் ஒருமுறை கூடி காவிரி நீர் பங்கீடு உள்ளிட்ட விவகாரங்களை ஆய்வு செய்து வருகிறது.

இதன் கீழ் செயல்படும் காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழுவுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் கூட்டங்களை நடத்த வேண்டும் என்ற கட்டாய விதிமுறை இல்லை. தேவைக்கேற்ப எப்போது வேண்டுமானாலும் கூட்டத்தை கூட்டி, காவிரி நீர் தொடர்பான நிலவரங்களை ஆய்வு செய்ய முடியும்.அந்த வகையில் காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழுவின் 139-வது கூட்டம் நாளை டெல்லியில் நடைபெறுகிறது.
தற்போது காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே முக்கியத்துவம் வாய்ந்த சூழல் நிலவி வரும் நிலையில் இந்தக் கூட்டம் நடைபெறுவது கவனம் பெற்றுள்ளது.குறிப்பாக ஆகஸ்ட் மாதத்தில் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டிய நீரின் அளவு குறித்து கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு தங்களது மாநிலங்களின் நீர்வள நிலவரம் மற்றும் தேவைகள் குறித்து விளக்க உள்ளனர்.காவிரி நீர் பங்கீட்டின் அடிப்படையில் ஆகஸ்ட் மாதத்தில் கர்நாடகா தமிழகத்திற்கு 45.5 டி.எம்.சி. அளவிலான நீரை திறந்துவிட வேண்டிய நிலையில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.
ஆனால் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களை சேர்த்து இதுவரை மொத்தம் 88 டி.எம்.சி. நீர் திறக்கப்பட வேண்டிய நிலையில், சுமார் 10 டி.எம்.சி. அளவிலான நீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் நிலுவையில் உள்ள நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டுமா, ஆகஸ்ட் மாதத்திற்கான நீர் திறப்பை எவ்வாறு உறுதி செய்வது உள்ளிட்ட விவகாரங்கள் நாளைய கூட்டத்தில் முக்கிய விவாதமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் காவிரி நீர் தேவையை அதிகாரிகள் கூட்டத்தில் வலியுறுத்துவார்கள் என்பதால், நாளைய ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தின் முடிவுகள் விவசாயிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
English Summary
Cauvery water sharing Regulatory committee to meet Delhi tomorrow Farmers anticipation