கம்மி பட்ஜெட் காஷ்மீரான ஊட்டி; பனிபடர்ந்த சூழலில் சுற்றுலா பயணிகள் கொண்டாட்டம்..!
Tourists celebrate in Ooty due to snowfall
தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை பனிக்காலம் நிலவும். மற்ற மாதங்களில் குளிராக காணப்படும் ஊட்டியில் பனிக்காலத்தின் போது உறைபனி கொட்ட தொடங்கும். இந்நிலையில் நீலகிரியில் கடந்த சில ஆண்டுகளாக காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தென்மேற்கு, வடகிழக்கு பருவமழைகளை போல உறைபனியும் தாமதமாகவே தொடங்கியது.
இந்த நிலையில், இந்த ஆண்டும் ஊட்டியில் பனிக்காலம் தாமதமாக தொடங்கியுள்ளது. வழக்கத்தை விட 40 நாட்களுக்கு பிறகு, கடந்த 12-ந் தேதி முதல் ஊட்டியில் உறைபனி கொட்ட தொடங்கியுள்ளது. இதன் காரணமாக ஊட்டியில் தாவரவியல் பூங்கா, தலைக்குந்தா, படகு இல்லம், பைக்காரா, மார்க்கெட், குதிரை பந்தய மைதானம் ஆகிய பகுதிகளில் அதிகாலை முதலே அதிக அளவில் பனி படர்ந்து உறைந்து காணப்பட்டது.

அதிகாலை வேளையில், பச்சைப்பசேல் என்று காணப்படும் மரம்,செடி,கொடிகளில் பனி படர்ந்து காணப்படுவதை பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. இதனால் ஊட்டி சென்றுள்ள சுற்றுலா பயணிகள் காலை குளிர் என்றும் பாராமல் உரை பணியாக இருந்தாலும் வெளியில் சென்று இயற்கையின் அழகோடு பனிப்பொழிவையும் ரசித்து வருகின்றனர். அத்துடன், பணியினை தங்களது கைகளால் அள்ளி வீசியும் விளையாடுகின்றனர்.
அதேநேரத்தில் உறை பனி தாக்கம் அதிகரிப்பால் கடும் குளிரில் உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. கேரட் உள்ளிட்ட அறுவடை பணிகளுக்கு செல்லும் விவசாய தொழிலாளர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். குளிரை சமாளிக்க முடியாமல் கம்பளி உள்ளிட்ட ஆடைகளை அணிந்து வேலைக்கு செல்கின்றனர்.

இந்நிலையில், நேற்ற ஊட்டி தாவரவியல் பூங்கா பகுதியில் குறைந்தபட்சமாக 03 டிகிரி செல்சியசும், தலைகுந்தா பகுதியில் ஒரு டிகிரி செல்சியசும் வெப்பநிலை பதிவாகி இருந்தது. இந்த ஆண்டு வழக்கத்தை விட உறைபனி தாக்கம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Tourists celebrate in Ooty due to snowfall