100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்.. நீதிமன்ற யோசனையை ஏற்க மறுத்த தமிழக அரசு..!!
Tngovt said not possible to monitor 100day work via GPS equipment
மத்திய அரசால் செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஊழியர்களை ஜிபிஎஸ் கருவி மூலம் கண்காணிக்க வாய்ப்பில்லை என நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தென்காசி மாவட்டம் தருகாபுரத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணி புரியும் பணியாளர்கள் தனியார் நபர்களின் விவசாய நிலத்தில் வேலை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் அரசுக்கு இழப்பீடு ஏற்படுவதாகவும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்த பொழுது 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களை ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்க முடியுமா என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர்.
இந்த நிலையில் இந்த மனு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்த பொழுது 100 நாள் திட்டப் பணிகளை ஜிபிஎஸ் மூலம் கண்காணித்தால் அதிக செலவாகும் என்பதால் அதற்கு வாய்ப்பில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே நூறு நாள் வேலை திட்டத்தை ஜிபிஎஸ் கருவிக்கொண்டு கண்காணிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் 100 நாள் திட்டப்பணியில் முறைகேடு தடுக்கவும் முறைகேட்டில் ஈடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசியல் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர்.
English Summary
Tngovt said not possible to monitor 100day work via GPS equipment