தூத்துக்குடியில் பரபரப்பு...! இலங்கைக்கு ரகசியமாக கடத்த முயன்ற ரூ.30 லட்சம் பொருட்கள் அதிரடியாக பறிமுதல்...!
There stir Thoothukudi Goods worth 30 lakhs being smuggled Sri Lanka seized surprise operation
தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான வாசனை சோப்புகள் மற்றும் ஷாம்பூக்களை க்யூ பிரிவு காவலர்கள் அதிரடியாக பறிமுதல் செய்தனர். கடத்தல் முயற்சியில் ஈடுபட்ட கும்பல், காவலர்களின் வருகையை கண்டு பொருட்களை அங்கேயே கைவிட்டுவிட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் நகர உட்கோட்டம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திரேஸ்புரம் பகுதியில் இருந்து இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்கள் கடத்தப்படுவதாக க்யூ பிரிவு காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, கடற்கரை பகுதியில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது திரேஸ்புரம் கடற்கரையின் வடபகுதியில் உள்ள வாடை பகுதியில், பதிவு எண் இல்லாத இரட்டை எஞ்சின் பொருத்தப்பட்ட பைபர் படகில் மர்ம நபர்கள் பொருட்களை ஏற்றிக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
காவலர்களை கண்டதும் கடத்தல் கும்பல் உறுப்பினர்கள் உயிர்தப்பினால் போதும் என்ற பதற்றத்தில், ஏற்றப்பட்டு கொண்டிருந்த 42 மூட்டைகளையும் அப்படியே போட்டுவிட்டு இருள் சூழ்ந்த கடற்கரை வழியாக தப்பிச் சென்றனர்.
இதையடுத்து அங்கிருந்த மூட்டைகளை சோதனையிட்ட காவலர்கள், அவற்றில் 11 ஆயிரத்து 520 ஷாம்பூக்கள் மற்றும் ஏராளமான வாசனை சோப்புகள் இருப்பதை கண்டறிந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.30 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது.
மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பதிவு எண் இல்லாத பைபர் படகும் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவான கடத்தல் கும்பலை கைது செய்ய பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
There stir Thoothukudi Goods worth 30 lakhs being smuggled Sri Lanka seized surprise operation